ETV Bharat / state

திமுகவால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது - எடப்பாடி பழனிசாமி

author img

By

Published : Oct 19, 2021, 7:12 PM IST

நீட் தேர்வை எக்காலத்திலும் திமுகவால் ரத்து செய்ய முடியாது என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி பேசியது தொடர்பான காணொலி
எடப்பாடி பழனிசாமி பேசியது தொடர்பான காணொலி

சேலம்: மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட அதிமுக பொன்விழா, நேற்று முன்தினம் (அக்.17) தமிழ்நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இதனையடுத்து சேலம் தலைவாசல் பேருந்து நிலையம் முன் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவச்சிலைக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (அக்.19) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கல்வியில் முதலிடம்

அப்போது அதிமுக கொடியை ஏற்றிவைத்து, தொண்டர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்த இயக்கத்தை எம்ஜிஆர் தொடங்கியபோது, கருணாநிதி எவ்வளவோ இடையூறு ஏற்படுத்தினார். அதனை முறியடித்து 11 ஆண்டு கால பொற்கால ஆட்சியை எம்ஜிஆர் மக்களுக்குத் தந்தார்.

எம்ஜிஆர், ஜெயலலிதா உருவச்சிலைக்கு மாலை அணிவித்த எடப்பாடி பழனிசாமி
எம்ஜிஆர், ஜெயலலிதா உருவச்சிலைக்கு மாலை அணிவித்த எடப்பாடி பழனிசாமி

எம்ஜிஆரின் மறைவுக்குப் பின்னர், இந்திய துணைக்கண்டத்திற்கே வழிகாட்டியாக திகழ்ந்தவர் ஜெயலலிதா. இருபெரும் தலைவர்களின் காலத்தில்தான் தமிழ்நாடு வளம் பெற்றது. கல்விக்கு முன்னுரிமை தந்து புரட்சி செய்ததால், இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.

மெகா தடுப்பூசி - மெகா பொய்

ஆசியா கண்டத்திலேயே 1022 ஏக்கரில், ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மிகப்பெரிய கால்நடைப் பூங்காவை கெங்கவல்லி தொகுதிக்கு தந்தோம். திமுகவின் ஐந்து மாத சாதனை என்ன என்று பார்த்தால், அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டி வைத்து செயல்படுத்திய திட்டங்களை திறந்து வைப்பதுதான்.

கரோனாவை முழுமையாக திமுக ஆட்சியால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஐந்து மாதமாக மெகா தடுப்பூசி முகாம் என 'மெகா பொய்' பேசி வருகின்றனர். விழிப்புணர்வு இல்லாததால் பலர் கரோனா பாதித்து உயிரிழக்கின்றனர்.

எடப்பாடி பழனிசாமி பேசியது தொடர்பான காணொலி

அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு கழகத்தை உடைக்க பார்க்கிறனர். அது எப்போதும் முடியாது. கட்சி தொடங்கிய 50 ஆண்டுகளில், 30 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது அதிமுகதான். அதிமுகவினரின் செயல்பாடுகளை தடுக்கத்தான் நிர்வாகிகள் மீது, திமுகவினர் வழக்கு போடுகின்றனர்.

ஜனநாயக படுகொலை

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களையும் தோல்வியுற்றதாக அறிவித்தது தேர்தல் ஆணையம். அதிமுக ஆட்சியில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தினோம். இப்போது திமுக, ஜனநாயகத்தை படுகொலை செய்துள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா நேர்மையான அரசியல் செய்தார்கள்.

இந்த முறை தோற்றாலும், அடுத்தமுறை வெற்றி பெறுவோம். அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி பெற, 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கினோம். அதன் மூலம் 435 பேர் மருத்துவம் படிக்க காரணமாக இருந்திருக்கிறோம்

திமுக தேர்தல் நேரத்தில் பொய்யான, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை தந்தனர். 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக ஸ்டாலின் கூறுகிறார். நகைக்கடன் தள்ளுபடி செய்தது அதிமுக என்பதால், அதில் முறைகேடு என கூறி 53 கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளனர்.

நீட் தேர்வு ரத்து சாத்தியமல்ல

இதன்மூலம் ஐந்து விழுக்காடு பேர் கூட பயனடைய முடியாது. இதை தேர்தல் நேரத்திலேயே சொல்லாமல், மக்களை ஏமாற்றி உள்ளனர். நீட் தேர்வு ரத்து என கூறி, அதிமுக கடைபிடித்த வழிமுறையைதான் திமுக அரசும் பின்பற்றுகின்றது.

சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியபோது முதலமைச்சர் முறையான பதில் அளிக்கவில்லை. நீட்தேர்வை இவர்களால் எந்த காலத்திலும் ரத்து செய்ய முடியாது" என்றார்.

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு - எடப்பாடி பழனிசாமி நாளை ஆளுநருடன் சந்திப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.