ETV Bharat / state

'பொங்கல் தொகுப்பில் ரூ.5000 ரொக்கம், கரும்பு வழங்கிடுக' - இபிஎஸ் வலியுறுத்தல்

author img

By

Published : Dec 23, 2022, 4:27 PM IST

Updated : Dec 23, 2022, 5:08 PM IST

தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு வழங்காததால் கரும்பு விவசாயிகள் ஏமாற்றப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: பொங்கல் பரிசில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்காத திமுக அரசுக்கு கடும் கண்டனம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற அண்ணாவின் வழியில் வந்தவர்கள் என்று இந்த ஆட்சியாளர்கள் தம்பட்டம் அடித்துக்கொண்டுள்ளனர். ஏழையின் வயிற்றில் அடிப்பது மட்டுமல்ல, ஏழைகளுக்கு உணவளிக்கும் விவசாயிகளையும் நடுத்தெருவில் நிறுத்தி வருகிறார்கள்.

என்னுடைய ஆட்சியில் தைத்திருநாளுக்கு பொங்கல் பரிசாக ரொக்கம் மற்றும் செங்கரும்புடன் கூடிய பொங்கல் தொகுப்பும் வழங்கப்பட்டு வந்தது. திமுக அரசும், 2023ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு செங்கரும்பு வழங்குவார்கள் என்ற எண்ணத்துடன் விவசாயிகள் அதிகளவில் செங்கரும்பு சாகுபடி செய்துள்ளனர்.

நேற்றைய தினம் (டிச.22) இந்த விடியா திமுக அரசு, பொங்கல் தொகுப்பு குறித்து அறிவித்த அரசு செய்திக் குறிப்பில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கமும், ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சர்க்கரையும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. தைப்பொங்கல் என்றாலே மக்களின் நினைவிற்கு வருவது செங்கரும்பு தான்.

அரசின் அறிவிப்பில் செங்கரும்பு இடம் பெறாதது, செங்கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் தலையில் இடி விழுந்ததுபோல் உள்ளது. பொதுமக்களிடையே மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, விவசாயிகளும், பொதுமக்களும் பொங்கல் தொகுப்பில் செங்கரும்பையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், விவசாயிகள் தாங்கள் விளைவித்த செங்கரும்பை அரசுகொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழகமெங்கும் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்து வருவதாக தற்போது ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்று வாய் வீரம் காட்டும் முதலமைச்சர், நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, எங்களிடம் கேட்டபடி, இந்த அரசு தைப்பொங்கலுக்கு 5ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பில் முழு செங்கரும்பையும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும். அதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் இந்த விடியாதிமுக அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மாணவி சரியாகப் படிக்கவில்லை என முகத்தில் சூடு வைத்த தலைமையாசிரியை!

Last Updated :Dec 23, 2022, 5:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.