ETV Bharat / state

Minister Ponmudi: வீடு திரும்பிய பொன்முடி - மீண்டும் மாலையில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்

author img

By

Published : Jul 18, 2023, 8:04 AM IST

அமலாக்கத்துறை சோதனைக்கு பின்னர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அமைச்சர் பொன்முடியிடம் விடிய விடிய விசாரணை நடைபெற்ற நிலையில், மீண்டும் இன்று மாலை அமைச்சர் பொன்முடி, எம்பி கௌதம சிகாமணி ஆகியோரை விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அளித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீடு மற்றும் அவர் சம்பந்தப்பட்ட 8 இடங்களில் நேற்று (ஜூலை17) காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மேலும் அவரது மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி எம்பியுமான கௌதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.

13 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சோதனையின் முடிவில் கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு பணம் மற்றும் சில முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள், அமைச்சர் பொன்முடியையும் விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து அமைச்சர் பொன்முடியிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவு பெற்றுள்ளது. நேற்று இரவு 9 மணியளவில் தொடங்கிய விசாரணை நள்ளிரவை கடந்து நீடித்த நிலையில், அதிகாலை 3 மணியளவில் விசாரணை நிறைவு பெற்றது. சுமார் 6 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதன்பின் அவர் வீடு திரும்பி உள்ளார். இதனிடையே, இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜராக அமலாக்கத் துறை அமைச்சர் பொன்முடிக்கு சம்மன் அளித்துள்ளது என்று அவரின் வழக்கறிஞர் சரவணன் தெரிவித்தார். விசாரணை நிறைவுபெற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர் சரவணன், “அமைச்சர் பொன்முடியின் வயது 72. அவரின் வயதையும், உடல் நலத்தையும் கருத்தில் கொள்ளாமல், மனிதாபிமானம் இல்லாமல் விசாரணை நடத்துவதாக கூறி நடந்து கொண்டது அமலாக்கத் துறை.

72 வயதான ஒருவரை நள்ளிரவில் விசாரிப்பது மனித உரிமை மீறல். விசாரணை, அமைச்சர் பொன்முடிக்கு மன உளைச்சல் மற்றும் உடல் உளைச்சலை கொடுத்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையையும் மீறி அமலாக்கத் துறை மனிதத்தன்மையற்று செயல்பட்டது.

2007இல் நடந்த வழக்குக்கு 2023இல் விசாரணை செய்வோம் என்கிறது, அமலாக்கத் துறை. விசாரணையை நாளை காலை நடத்தினால் என்ன, குடி மூழ்கிவிடுமா அல்லது ஆதாரங்கள் அழிந்து விடுமா? இது அமலாக்கத்துறை அலுவலகமா அல்லது சித்ரவதை கூடமா என்று தெரியவில்லை.

அமலாக்கத் துறையின் கண்களுக்கு 20 வருடங்களுக்கு முன்பு நடந்த திமுக அமைச்சர்களின் வழக்குகள் தெரியுமா? அதிமுக அமைச்சர்களின் வழக்குகள் நிலுவையில் இருப்பது அமலாக்கத் துறையின் கண்களுக்கு தெரியாதுபோல. இன்றைய விசாரணை முடிந்து அமைச்சர் வீடு திரும்பியுள்ளார். இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு ஆஜராக அவருக்கு சம்மன் கொடுக்கப்பப்பட்டுள்ளது.

கொள்கை ரீதியாகவும், அரசு நிர்வாக ரீதியாகவும் ஆளுநர் ரவியை தொடர்ந்து எதிர்ப்பதால்தான் அமைச்சர் பொன்முடியை குறி வைத்துள்ளார்கள். ஆளுநர் டெல்லிக்குச் சென்ற ஒருவாரத்தில் அமைச்சர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்துகிறது. அமலாக்கத் துறையிடம் கேட்க வேண்டியது ஒன்றுதான், 2007இல் நடந்த வழக்குக்கு 2023இல் வந்து தேடினால் எந்த ஆவணங்கள் கிடைக்கும்?

2024 தேர்தலுக்காக விடுக்கப்பட்ட மிரட்டல்தான் இது. தேசிய அளவில் எதிர்கட்சிகள் கூட்டத்தை ஒருங்கிணைப்பதற்காக திமுகவுக்கு விடப்பட்ட நேரடி மிரட்டல். இதற்கு முதலமைச்சர் தக்க பதிலடி கொடுத்துள்ளார். எனினும், அமலாக்கத்துறை எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பொன்முடி பொறுமையாக பதில் அளித்தார். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அமைச்சர் அறிவிப்பார்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நாங்கள் எந்த ஈடி சோதனைக்கும் அஞ்சமாட்டோம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.