ETV Bharat / state

'செவிலியர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்துவோம்' - மருத்துவர்கள் சங்கம்

author img

By

Published : Jan 2, 2023, 10:09 PM IST

எம்ஆர்பி கோவிட் செவிலியர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்துவோம் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத்

சென்னை: 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒப்பந்த அடிப்படையிலும், தற்காலிக அடிப்படையிலும் பணி நியமிக்க மாட்டோம் என திமுக கூறியது. ஆனால், தொழிலாளர் விரோதப் போக்கை கடைபிடிக்கிறது. மீண்டும் மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் என்பதை ஏற்க முடியாது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவத்துறை பணியாளர்களும் சேர்ந்து போராட்டம் நடத்துவோம்' சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் , எம்ஆர்பி கோவிட் செவிலியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராஜேஷ் கூறும்போது, “கடந்த 2019ஆம் ஆண்டு MRB தேர்வில் மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் கரோனா பெருந்தொற்று பேரிடர் காலத்தில் சுமார் 6ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் கடந்த 2020ஆம் ஆண்டு பணியமர்த்தப்பட்டோம்.

எங்களுக்கு முன்னர் 2ஆயிரத்து 300 செவிலியர்கள் மற்றும் எங்களுக்கு பின்பு 950 செவிலியர்கள் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டு, பின்னர் ஒப்பந்த செவிலியர்களாக பணிமாற்றம் செய்து அரசால் ஈர்த்துக்கொள்ளப்பட்டது. இதேபோல், கரோனா பேரிடர் பெருந்தொற்று காலத்தில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட சுமார் ஆயிரத்து 331 மருத்துவர்களை நிரந்தர மருத்துவர்களாக பணிமாற்றம் செய்து பணி ஆணை வழங்கப்பட்டது.

ஆனால், சுமார் 3ஆயிரத்து 200 செவிலியர்களைத் தொடர்ந்து கரோனா முதல் அலை, இரண்டாம் அலை மற்றும் மூன்றாம் அலை என தொடர்ந்து பணிநீட்டிப்பு செய்து கடந்த 2 வருடம் 7 மாதங்களாக பணிபுரிந்து வருகிறோம். இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி எங்களை மாவட்ட சுகாதார சங்கத்தின் கீழ் பணிமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து சென்னை பொதுத்துறை இயக்குநர் அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்தின் விளைவாக அந்த ஆணையை ரத்து செய்து பின்பு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் முன்னிலையில் நடந்த மூன்று கட்ட பேச்சுவார்த்தையின் போது ஒப்பந்த செவிலியர்களாக ஈர்த்துக் கொள்ளப்படுவதாக உறுதியளிக்கப்பட்டது. ஆனால் தற்போது 30.12.2022, இரவு 8 மணி அளவில் MRB Covid 2472 தற்காலிக செவிலியர்களை பணியிலிருந்து விடுவித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது MRB கோவிட் செவிலியர்களும் மிகுந்த மன உளைச்சளையும் மன வேதனைக்கு ஆளாக்கப்பட்டோம்.

நாங்கள் கடந்த 2 வருடம் 7 மாதங்களாக எங்கள் உயிரையும் துட்சமாக கருதி எங்கள் குடும்பங்களை விட்டு வெவ்வேறு மாவட்டங்களில் கடந்த 6 மாதமாக ஊதியம் இன்றி பணிபுரிந்து வருகிறோம். ஆனால், எங்களை இந்த அரசு ஏமாற்றி பணியில் இருந்து நீக்கி அதை மறைக்கும் விதமாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி வழங்கப்படும் என்கின்றனர். அவ்வாறு வழங்கப்படும் இப்பணியானது நாங்கள் சாகும் வரை தற்காலிக செவிலியர்களாகவே, ஒவ்வொரு 11 மாதத்திற்கு ஒருமுறை (Service Breakup) செய்து, எங்களை நிரந்தரப்பணியில் ஈர்த்துக் கொள்ள முடியாத வகையில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கான அரசு என்று சொல்லும் இந்த விடியல் ஆட்சியில் கொத்தடிமைதனத்தை ஊக்குவிக்கும் விதத்தினை இந்த அரசாணை வழிவகுக்கிறது. எனவே, இந்த மனிதாபிமானமற்ற செயலை களைக்கும் வகையில் தி.மு.க தேர்தல் வாக்குறுதி எண்.356 நிறைவேற்றும் வகையிலும் தமிழக அரசு உடனடியாக இந்த அரசாணையை திரும்ப பெற்று இந்த ஆட்சி மக்களுக்கான ஆட்சி என்பதை நிரூபிக்க வேண்டும்.

எனவே, எங்களுக்கு முன்பு பணியில் தற்காலிக செவிலியர்களாக சேர்ந்த சுமார் 2ஆயிரத்து 300 பேர் மற்றும் எங்களுக்கு பின்பு தற்காலிக செவிலியர்களாக பணியில் சேர்ந்த 950 பேருக்கு ஒப்பந்த செவிலியர்களாக பணிமாற்றம் செய்து பணி ஆணை வழங்கப்பட்டதைப் போல் மற்றும் எம்ஆர்பி கரோனா தற்காலிக மருத்துவர்களையும் நிரந்தர மருத்துவர்களாக பணிமாற்றம் செய்ததை போலவும், எங்களுக்கும் இந்த அரசாணையை ரத்து செய்து ஒப்பந்தப் பணி ஆணை (Contract Basis) வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

அப்போது பேசிய சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் கூறும்போது, “திமுக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒப்பந்த அடிப்படையிலும், தற்காலிக அடிப்படையிலும் பணி நியமிக்க மாட்டோம். ஆனால் தொழிலாளர் விரோதப் போக்கை கடைபிடிக்கிறது. மீண்டும் மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் என்பதை ஏற்க முடியாது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவத்துறை பணியாளர்களும் சேர்ந்து போராட்டம் நடத்துவோம். 6 மாதத்திற்கு மேலாக மருத்துவர்கள் , செவிலியர்களுக்கு சம்பளம் தராமல் உள்ளனர்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: "சங்கத்தை வலுப்படுத்துவது எங்கள் நோக்கம் அல்ல" - அமைச்சருக்கு செவிலியர்கள் பதில்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.