ETV Bharat / state

திமுகவில் 1 கோடி உறுப்பினர்கள்! ஜூன் 3ல் கலைஞர் நூற்றாண்டு விழா! மா.செ. கூட்டத்தில் தீர்மானம்!

author img

By

Published : Mar 22, 2023, 1:18 PM IST

ஜூன் 3ஆம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழா தொடங்குவதற்குள், திமுகவில் புதிதாக ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

DMK
DMK

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று(மார்ச்.22) திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த நூற்றாண்டு விழா தொடங்குவதற்குள், திமுகவில் புதிதாக ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், "கலைஞர் கருணாநிதி அரை நூற்றாண்டு காலம் கட்டிக் காத்த கழகத்தை மேலும் வலிமைப்படுத்த, ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க உடன்பிறப்புகளாய் இணைவோம் என்ற மாபெரும் முன்னெடுப்பு கழக தலைவர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட உள்ளது.

ஏற்கனவே, ஒரு கோடி உறுப்பினர்களைக் கொண்ட பேரியக்கத்தில், புதிதாக மேலும் ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்கும் பெருமுயற்சியை ஏப்ரல் 3ஆம் தேதியன்று தொடங்கி, ஜூன் 3ஆம் தேதி கலைஞர் நூற்றாண்டு தொடங்குவதற்குள் இப்பணியை நிறைவேற்றுவதென இக்கூட்டம் முடிவெடுக்கிறது. துண்டறிக்கைகள் மூலமாகவும், திண்ணைப் பிரச்சாரங்கள் மூலமாகவும், முக்கிய இடங்களில் முகாம்கள் அமைப்பது மூலமாகவும், வீடு தோறும் தேடிச் சென்றும் புதிய உறுப்பினர்களைச் கழகத்தில் இணைத்திடுவோம்.

கலைஞரை தாய் தமிழ்நாட்டிற்கு தந்த திருவாரூரில் ஜூன் 3ஆம் தேதி, தலைமை கழகத்தால் நூற்றாண்டு தொடக்கவிழா மாநாடு நடத்தப்பட இருக்கிறது. தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் திருவாரூரில் அமைக்கப்பட்டுள்ள எழில்மிகு கலைஞர் கோட்டம் வளாகம், அருங்காட்சியகம், திருமண மண்டபம் உள்ளிட்ட கட்டிடங்களை - கட்டிடங்கள் என்று சொல்வதை விட அன்னை தமிழ்நாட்டிற்கும்- இந்திய திருநாட்டிற்கும் கலைஞர் ஆற்றிய பங்களிப்பின் பசுமையான நினைவுச் சின்னங்களாக கலைஞர் கோட்டம், அருங்காட்சியகத்தை அகில இந்திய தலைவர்கள் திறந்து வைக்க இருக்கிறார்கள்.

தொடக்க விழா மாநாட்டில், காலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்களும், மாலையில் அகில இந்திய தலைவர்களும் உரையாற்ற இருக்கிறார்கள். வரும் ஜூன் 3ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜூன் 3ஆம் தேதி வரை ஓராண்டு காலம் கலைஞரின் நூற்றாண்டு விழாவை தொண்டர்களின் இல்ல விழாவாக - மக்கள் விழாவாக - கொள்கை விழாவாக - வெற்றி விழாவாக- இந்தியத் திருநாடே திரும்பிப் பார்க்கும் வகையில் மிகச் சிறப்பாக கொண்டாடுவது என திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.

தமிழ் மொழிக் காப்பு - தமிழின உரிமைகள் - தமிழ்நாட்டின் உயர்வு - திராவிடச் சுயமரியாதை - மாநில சுயாட்சி - சகோதரத்துவம் - மதச்சார்பின்மை - சாதி ஒழிப்பு - ஒடுக்கப்பட்டோர் நலன் - சமூக நீதி - பெண்ணுரிமை - இலக்கிய வளர்ச்சி - கலைத்துறை மேம்பாடு எனப் பலமுனைப் பங்களிப்புகளை கலைஞர் ஆற்றி இருக்கிறார். கலைஞரின் நோக்கத்துக்காக அவரது வழித் தடத்தடத்திலே அயராது பணியாற்ற இக்கூட்டம் உறுதி ஏற்கிறது" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: பட்ஜெட்டில் சில துறைகளுக்கு முக்கியத்துவம் இல்லையா? அரசு விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.