ETV Bharat / state

நெஞ்சு வலியால் தனியார் மருத்துவமனைக்குச் சென்ற இளைஞர் உயிரிழப்பு - மகளை முதல் நாளில் ஸ்கூலில் சேர்க்க சென்றபோது நிகழ்ந்த சோகம்!

author img

By

Published : Jul 1, 2022, 10:30 PM IST

தாம்பரம் அருகே நெஞ்சு வலி காரணமாக தனியார் மருத்துவமனைக்குச் சென்ற நபர் உயிரிழந்ததால், தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

நெஞ்சு வலியால் தனியார் மருத்துவமனைக்கு சென்ற நபர் உயிரிழப்பு - உறவினர்கள் கேள்வி!
நெஞ்சு வலியால் தனியார் மருத்துவமனைக்கு சென்ற நபர் உயிரிழப்பு - உறவினர்கள் கேள்வி!

சென்னை கிழக்கு தாம்பரம் காந்தி நகர் லால்பகதூர் சாஸ்திரி தெருவைச்சேர்ந்தவர் சாலமன் அமல்ராஜ்(39). இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர் இசை கருவியின் ஆசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தனது நான்கு வயது மகள், கிழக்கு தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு முதல் நாள் செல்வதால், சாலமன் குழந்தையை பள்ளியில் விடுவதற்குச்சென்றுள்ளார்.

அப்போது பள்ளியில் மகளை விட்ட பின்னர், சாலமனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளியின் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துள்ளார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், இது சாதாரண வாய்வு கோளாறு பிரச்னை எனக்கூறிவிட்டு சில சிகிச்சை அளித்து வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

ஆனால், வீட்டிற்குச் சென்ற சிறிது நேரத்தில், மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு நெஞ்சு வலிப்பதாக உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக அவரது உறவினர்கள், மீண்டும் அதே மருத்துவமனைக்கு சாலமனை அழைத்து வந்துள்ளனர். அப்போது சாலமனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

நெஞ்சு வலியால் தனியார் மருத்துவமனைக்கு சென்ற நபர் உயிரிழப்பு - உறவினர்கள் கேள்வி!

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர், தவறான சிகிச்சையின் காரணமாகவே அவர் உயரிழந்ததாகக் கூறி மருத்துவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் இது குறித்து தகவல் அறிந்த சேலையூர் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர், உறவினர்களை சமாதானப்படுத்தி உடலை மீட்டு உடற்கூராய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த சேலையூர் காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பிகார்: மகளை பெற்றோரே பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.