ETV Bharat / state

அனைத்து ஸ்பா, மசாஜ் மையங்களில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை

author img

By

Published : Feb 8, 2022, 6:53 AM IST

தமிழ்நாட்டில் ஸ்பா, மசாஜ் மையங்களில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து காவல் உயர் அலுவலர்களுக்கும் தமிழ்நாடு டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் அனைத்து ஸ்பா,மசாஜ் செண்டர்களில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை..!
தமிழ்நாட்டில் அனைத்து ஸ்பா,மசாஜ் செண்டர்களில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை..!

சென்னை: விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் இயங்கிவரும் மருதசஞ்ஜீவினி என்ற ஆயுர்வேத சிகிச்சை மையத்தின் சட்டரீதியான செயல்பாடுகளில் காவல் துறை தலையிடக் கூடாது என உத்தரவிடக் கோரி அதன் நிர்வாகி சி.பி. கிரிஜா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

சட்ட விதிகளுக்குள்பட்டு சிகிச்சை அளித்துவருவதாகவும், ஆனால் சோதனை என்ற அடிப்படையிலும், புகார்கள் வருவதாகவும் கூறி அன்றாடச் செயல்பாடுகளில் காவல் துறை அடிக்கடி தலையிடுவதாக மனுவில் குற்றஞ்சாட்டியிருந்தார்.

உயர் நீதிமன்றம் உத்தரவு

இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு உயர் நீதிமன்றம் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து உத்தரவுகளைப் பிறப்பித்தது. அதனடிப்படையில் ஆயுர்வேத சிகிச்சை, மசாஜ் மையங்கள் ஆகியவை தொடர்பாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் வருவதால், காவல் துறை ஆய்வுசெய்து நடவடிக்கை எடுப்பதால் அதைத் தடுக்க முடியாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

காவல் துறையின் நடவடிக்கைகளைத் தடுக்கும்வகையில் உத்தரவு பிறப்பிப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது மட்டுமல்லாமல், குற்றங்கள் அதிகரிப்பதற்குக் காரணமாகவும், அவற்றை ஊக்குவிப்பதாகவும் அமைந்துவிடும் என்றும் உயர் நீதிமன்றம் எச்சரிக்கைவிடுத்தது.

இவ்வாறு பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்த உயர் நீதிமன்றம், சென்னை மாநகராட்சியில் உள்ளதுபோல தமிழ்நாடு முழுவதும் உள்ள ஸ்பாக்கள், மசாஜ் மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டுமென தமிழ்நாடு டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

டிஜிபி சுற்றறிக்கை

இதுபோன்ற இடங்களில் சட்டவிரோத செயல்பாடுகள் நடைபெறாமல், வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் தகுந்த அறிவுறுத்தல்களை வழங்கவும் தமிழ்நாடு டிஜிபிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு கண்காணிக்கும்போது, மையங்களின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கிடமாக இருந்தாலோ, தகவல்கள் கிடைத்தாலோ சட்டவிதிகளைப் பின்பற்றி காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவைக் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு காவல் துறைத் தலைவர் (டிஜிபி) சைலேந்திரபாபு, அனைத்து காவல் துறை உயரலுவலர்கள், காவல் ஆணையர்கள், கண்காணிப்பாளர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இதையும் படிங்க:கூகுள் பே, போன் பே, பேடிஎம் மூலம் யாசகம் கேட்கும் நாட்டின் முதல் டிஜிட்டல் பிச்சைக்காரர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.