ETV Bharat / state

மகளுக்குத் திருமணம்: வருங்கால வைப்புநிதியை நடத்துநருக்கு வழங்க உத்தரவு

author img

By

Published : Oct 10, 2020, 9:16 PM IST

சென்னை: மகள் திருமண செலவுக்காக தனது வருங்கால வைப்பு நிதியிலிருந்து பணம் கோரிய நடத்துநருக்கு இரண்டு வாரங்களில் உரிய தொகையை வழங்க அரசுப் போக்குவரத்துக் கழக, கோயம்புத்தூர் மண்டல பொதுமேலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தின் கோயம்புத்தூர் மண்டலத்தில் நடத்துநராகப் பணியாற்றிவருபவர் துரைசாமி. இவர் மகளின் திருமண செலவுக்காக, தனது வருங்கால வைப்பு நிதியிலிருந்து ஏழு லட்சம் ரூபாயை விடுவிக்கக்கோரி, பொதுமேலாளரிடம் மனு கொடுத்தார்.

ஆனால், அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததை அடுத்து, துரைசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர். சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, கரோனா ஊரடங்கு காரணமாக பேருந்துகள் இயக்கப்படாததால் போக்குவரத்துக் கழகம் பெரும் நிதி நெருக்கடியில் உள்ளதாகவும், மனுதாரரின் கோரிக்கை மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, துரைசாமியின் வருங்கால வைப்பு நிதியிலிருந்து எவ்வளவு வழங்க முடியும் எனக் கணக்கிட்டு, 2 வாரங்களில் வழங்க போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிட்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.