திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், 'உள்ளாட்சித் தேர்தல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின் கட்சியின் உடைய நிர்வாகிகளை கூட்டி மாநிலத் தலைவர் எப்படி தேர்தலை சந்திப்பது குறித்து பேசுவார். பிறகு தோழமைக் கட்சிகளுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்.
’ப.சிதம்பரம் கைதைப் பொறுத்தவரை அரசியல் ரிதீயாக பழி வாங்கவோ, நெருக்கடி கொடுக்கவோ, காங்கிரஸ் தலைவர்களை அச்சுறுத்தவோ இதுபோன்ற வழக்குகள் போடப்படுகின்றன என்பது ஒரு பக்கம் இருந்தாலும்; அந்த வழக்கில் உள்ள அம்சங்களை அவர் வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் சந்திப்பார்.
ஆனால் இடைப்பட்ட காலத்தில் அவரின் உடல்நிலை சரியில்லை. சிறுசிறு வசதிகூட அவருக்கு செய்து கொடுக்கவில்லை. அவருக்கு மன உளைச்சலையும் உடல் ரிதீயான பிரச்னைகளையும் உருவாக்க அரசு திட்டமிட்டு வேண்டுமென்றே செய்வது கண்டனத்துக்குரியது. நீதிபதிகள் கருணையோடு அணுக வேண்டும்' என்று கூறினார்.
மேலும், ’திருவள்ளுவர் எந்த மதம் என்று இதுவரை அவர் குறிப்பிட்டது இல்லை. அவரின் 1330 குறள்களிலும் தெய்வம் ஆதிபகவன் என்று குறிப்பிட்டு உள்ளார். ஆனால், எந்த மதத்தில் உள்ள தெய்வத்தையும் குறிப்பிட்டு அவர் கூறவில்லை. அவர் பொதுவாகத்தான் திருக்குறள் எழுதியுள்ளார்.
திருவள்ளுவரின் சிலைக்கு திருநீறுப் பூசப்படுவதாலும், காவி போர்த்தப்படுவதாலும் பாஜகவுக்கு எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை. மக்கள் நகைச்சுவையாக தான் இதை எடுத்துக் கொள்வார்கள். பாஜகவைப் பொறுத்தவரை இது அவசியம் இல்லாத வேலை. வீண் சர்ச்சைகளையும், குழப்பங்களையும் மக்கள் இடத்தில் ஏற்படுத்தி பிளவை உண்டாக்க முயற்சிக்கின்றனர். இதனால் எந்த நன்மையும் அவர்களுக்குக் கிடைக்காது' என்று கூறினார்.
இதையும் படிங்க:
கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு - உயிரைக் காப்பாற்றிய தீயணைப்புத்துறையினர்!