ETV Bharat / state

செல்போன் திருடிய நபர் உயிரிழப்பு - காவல்துறை மீது புகார்!

author img

By

Published : Dec 21, 2022, 10:34 AM IST

சென்னையில் செல்போனை திருடியதாக பிடிபட்ட நபர் காவல் துறையினர் தாக்கியதால் மரணமடைந்ததாக அவரது உறவினர் புகார் அளித்துள்ளார்.

செல்போன் திருடிய நபர் உயிரிழப்பு - காவல்துறை மீது புகார்!
செல்போன் திருடிய நபர் உயிரிழப்பு - காவல்துறை மீது புகார்!

சென்னை: காரப்பாக்கம் கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் ஸ்டீபன் கிளோடியோ (21). இவர் நேற்று (டிச.20) மாலை 119 எண் கொண்ட மாநகர பேருந்தில் பயணித்து கொண்டிருந்துள்ளார். அப்போது துரைப்பாக்கம் அருகே பேருந்து சென்றபோது, இரு நபர்கள் ஸ்டீபனிடம் செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.

உடனடியாக பொதுமக்கள் உதவியுடன் ஒரு திருடனை மட்டும் பிடித்த ஸ்டீபன், கண்ணகி நகர் சுங்கச்சாவடி அருகே உள்ள காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் பெரம்பூர் நீளம் கார்டன் 3ஆவது தெருவைச் சேர்ந்த தினேஷ்குமார் (26) என்பது தெரிய வந்துள்ளது.

இவர் மீது கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை உள்பட பல காவல் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட செல்போன் பறிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையல் ஸ்டீபனிடம் பறித்த செல்போனை தனது கூட்டாளியான ராமச்சந்திரன் எடுத்துச் சென்றதாக பிடிபட்ட தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தினேஷ்குமாரின் மனைவி கௌசல்யாவை தொடர்பு கொண்ட காவல் துறையினர், ‘உங்களது கணவர் தினேஷ்குமார் செல்போன் திருட்டு வழக்கில் பிடிப்பட்டுள்ளார். பறித்த செல்போனை அவரது நண்பரிடம் இருந்து வாங்கி கொடுக்க வேண்டும்” என கூறியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து தினேஷ்குமாரின் மனைவி கௌசல்யா மற்றும் அவரது தாய் ஆகியோர், மூலக்கொத்தளத்தில் இருந்த தினேஷ்குமாரின் நண்பரிடம் இருந்து செல்போனை வாங்கியுள்ளனர். பின்னர் அதனை கண்ணகி நகர் காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து செல்போன் கிடைத்து விட்டதால் ஸ்டீபன் புகார் ஏதும் வேண்டாம் எனக் கூறி எழுதிக் கொடுத்து சென்றுள்ளார். எனவே தினேஷ் குமாரை எச்சரித்து எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பியுள்ளனர். பின்னர் வீட்டிற்கு வந்த தினேஷ்குமார் மிகவும் சோர்வாக இருந்ததால் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற்று மீண்டும் வீட்டுக்கு வந்துள்ளனர்.

அதன் பிறகு சாப்பிட்டு உறங்கிய தினேஷ்குமாருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சுய நினைவின்றி கீழே விழுந்துள்ளார். உடனடியாக தினேஷ் குமாரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தினேஷ்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக திரு.வி.க நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், உயிரிழந்த தினேஷ்குமார் மனைவி கெள்சல்யா உடன் ஒரு மாதமாக பெரம்பூரில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். மேலும் தினேஷ்குமார் ஹோட்டல்களில் சிமினி சர்வீஸ் செய்யும் வேலை பார்த்து வந்த நிலையில், தற்போது சிறு சிறு கூலி வேலைகளையும் பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற தினேஷ்குமார், செல்போன் திருட்டில் ஈடுபட்டு பிடிப்பட்டுள்ளார். இந்த நிலையில் செல்போன் திருட்டு வழக்கில் தினேஷ்குமாரை கண்ணகி நகர் காவல் துறையினர் தாக்கியதால்தான் அவர் உயிரிழந்துள்ளார் என திருவிக நகர் காவல் நிலையத்தில், தினேஷ்குமாரின் சகோதரர் செந்தில்குமார் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த தினேஷ்குமாரின் உடலில் எந்த விதமான காயமும் இல்லை என தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: நூதன முறையில் கடத்தல் நாடகமாடி பணம் பறித்த நபர் கைது..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.