ETV Bharat / state

காவல் துறையினர் எதுக்கு இருக்கீங்க? - விளாசிய ஆணையர் ரவி

author img

By

Published : Feb 1, 2022, 5:26 PM IST

புகார் கொடுக்கவரும் பொதுமக்களை அலைக்கழிக்க வைத்தால் கூண்டோடு காலி பண்ணிடுவேன் என தாம்பரம் காவல் ஆணையர் ரவி, வாக்கி டாக்கி மூலம் காவல் துறையினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காவலர்களை விலாசிய காவல் ஆணையர் ரவி
காவலர்களை விலாசிய காவல் ஆணையர் ரவி

சென்னை காவல் ஆணையரகம் பிரிக்கப்பட்டு, தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்களாகச் செயல்பட்டுவருகிறது. தாம்பரம் காவல் ஆணையராக ரவி பணியாற்றிவருகிறார். இந்நிலையில் பள்ளிக்கரணை பகுதியில் மனைவியை கணவன் தாக்கிய சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், புகார்கூட முறையாக வாங்கவில்லை என்றும் கூறி பாதிக்கப்பட்டவர் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் நான்கு முறை சென்று புகார் கொடுத்துள்ளார்.

இதனைத் தெரிந்ததும் தாம்பரம் காவல் ஆணையர் ரவி வாக்கி டாக்கி மூலம் நடவடிக்கை எடுக்காத காவல் துறை மீது கடும் கோபத்தில் கண்டித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் வாக்கி டாக்கியில் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

‘கூண்டோடு காலிபண்ணிடுவேன்’

அந்த ஆடியோவில், "கணவன் அடித்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற மனைவி, நான்கு முறை புகார் கொடுக்க வந்துசெல்கிறார். பள்ளிக்கரணை காவல் துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் முதல் ஆய்வாளர் வரை அனைவரையும் கூண்டோடு கன்னியாகுமரி, திருநெல்வேலிக்கு மாற்றிவிடுவேன்.

தனுஷ்கோடியில் போய் அலையைத்தான் எண்ணி கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளிவிடுவேன். சரியாக நடவடிக்கை எடுக்காமல் சும்மா இருக்கக் கூடாது. வெட்டித்தனமாக வேற வேலைய ஏதாவது பார்த்துக்கொண்டு இருந்தீர்கள் என்றால் அவ்வளவுதான். கூண்டோடு காலி பண்ணிவிடுவேன்.

காவல் துறையினர் எதுக்கு இருக்கீங்க

தாக்கப்பட்டது தொடர்பாக பெண் ஒருவர் புகார் கொடுக்க நான்கு முறை வருகிறார். ஒரு நடவடிக்கை எடுக்க முடியாமல் என்ன செய்றீங்க. காவல் துறை எதுக்கு அங்கே இருக்கீங்க. காவலர்கள் பொதுமக்கள் சேவகர்கள்தானே. பொதுமக்களை துன்புறுத்ததான் இருக்கிறீர்களா?

இதைபோல அனைத்து காவல் நிலையங்களுக்கும் சைபர் கிரைம் தொடர்பாக புகார்கள் வந்தால் அந்தந்த காவல் நிலையங்களிலேயே புகாரைப் பெற்று சிஎஸ்ஆர் கொடுத்துவிட வேண்டும். அதன்பிறகு வழக்கை வேறு பிரிவுக்கு மாற்றம் செய்துகொள்ளலாம்.

சைபர் கிரைம் புகார்களை தலைமையகத்திற்கு அனுப்பிவைக்கக் கூடாது. புகார் கொடுக்க வருபவர்களை அலைகழிக்கக் கூடாது. குறையோடு புகார் கொடுக்க வருபவர்களை உட்கார வைத்து புகாரைப் பெற்று அனுப்பிவிடுங்கள். சரியாகப் பணியைச் செய்யுங்கள்.

காவலர்களை விளாசிய காவல் ஆணையர் ரவி

பீதியடைந்த காவலர்கள்

நான் எதிர்பார்ப்பது சிறப்பாகப் பணி செய்ய வேண்டும். இல்லையென்றால் சும்மா விடமாட்டேன், கூண்டோடு தூக்கிவிடுவேன். அதன் பிறகு மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்" என எச்சரிக்கைவிடுத்தார்.

காவல் ஆணையர் ரவி எச்சரித்தவுடன் சம்பந்தப்பட்ட காவலர்களும் தாங்கள் உடனடியாக காவல் ஆணையர் ரவி உத்தரவிட்ட விவகாரங்களில் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த வாக்கி டாக்கி ஆடியோ தற்போது வெளியாகி தாம்பரம் காவல் ஆணையரின்கீழ் பணிபுரியும் காவலர்கள் இடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: VIRAL VIDEO: மனைவியின் காதலனை கொடூரமாகக் கொன்ற கணவன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.