ETV Bharat / state

"என் கருத்துகளை லைக் செய்தால் போதாது... ஷேர் செய்யுங்கள்.. உங்கள் விமர்சனம் ஆன்டி வைரஸ் அலர்ட்" - சமூகவலைதள தன்னார்வலர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 21, 2023, 12:32 PM IST

Updated : Oct 21, 2023, 7:06 PM IST

MK Stalin: சென்னையில் நடைபெற்ற சமூக வலைதள தன்னார்வலர்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், நெகட்டிவ் பிரசாரம் மூலம் எதிரியை வீழ்த்துவதை விட பாசிட்டிவ் பிரசாரம் மூலம் நம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

நான் பேசுவதை லைக் மட்டும் செய்து நிறுத்திவிடாமல் சேரும் செய்யுங்கள்
நான் பேசுவதை லைக் மட்டும் செய்து நிறுத்திவிடாமல் சேரும் செய்யுங்கள்

சென்னையில் நடைபெற்ற சமூக வலைதள தன்னார்வலர்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தாங்கள் ஆரிய ஆதிக்கத்திற்கு தான் எதிரியே தவிர, ஆன்மீகத்திற்கு அல்ல என கூறினார்.

சென்னையில் ஷெனாய் நகரில் இன்று (அக். 21) திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் சமூக வலைதள தன்னார்வலர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி, நீட் விலக்கு நம் இலக்கு என்ற தலைப்பில் திமுகவின் இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவரணி சார்பில் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெரும் இயக்கத்தை கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

இதை அடுத்து மேடையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "தமிழகத்தை தலை நிமிர்த்துவதற்காக பிறந்த இயக்கம் தான் திராவிட இயக்கம். தற்போது 'சீவிடுவேன், சீவிடுவேன்' என சொல்கிறார்களே, அதுபோல யாருடைய தலையையும் எடுக்க பிறந்த இயக்கமல்ல திராவிட இயக்கம். சமூக வலைதளங்கள் நினைத்தால் ஒருவரை ஒரே நாளில் புகழின் உச்சிக்கு கொண்டு செல்ல முடியும்.

அதே போல ஒருவர் பல காலமாக கட்டமைத்த பிம்பத்தை சில நொடிகளிலேயே உடைத்து விட முடியும். என்னை பொருத்தவரை ஒருவரை எதிர்மறை பிரசாரத்தின் மூலம் வீழ்த்துவதை விட நேர்மறை பிரசாரத்தின் மூலம் நம்மை வளர்த்துக் கொள்வதுதான் சரியானது. இந்த இயக்கத்தை அழித்துவிடலாம் என நினைத்தவர்களின் எண்ணம் தான் அழிந்துவிட்டது.

திமுகவை கற்பனையில் கூட அழிக்க முடியாது. திராவிட இயக்கத்தை ஒழிப்பதை தவிர வேறு வேலையில்லை எனக் கூறியவர்கள் இறுதியில் இங்கு வந்து அடைக்கலம் அடைந்தது தான் பார்க்க முடிந்தது. நாம் இன்று பாஜக, அதிமுக போன்றவர்களுடன் மோதி கொண்டிருக்கிறோம். சாதி மதத்தின் பெயரால் பிளவு படுத்தி நாட்டை நாசம் செய்ய நினைக்கக்கூடிய ஒரு கூட்டத்திற்கு எதிராக நாம் மோதிக் கொண்டு இருக்கிறோம்.

பாஜகவின் சாதித்தன்மை என்பது தமிழ்நாட்டுக்கு மட்டும் எதிரானது அல்ல, நம் ஒட்டுமொத்த இந்தியாவிற்குமே எதிரானது. ஏன் ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் எதிரானது. இப்படிப்பட்ட பாசிசவாதிகள் ஒரு பக்கம், இவர்கள் பேச்சைக் கேட்டு அவர்கள் சொல்லும்படி நடந்து கொண்டு தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்த அதிமுக மறுபக்கம்.

கொள்கை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கக்கூடிய கூட்டமாக தான் அதிமுக தற்போது இருக்கிறது. பாஜகவுடன் இருந்தால் நாம் தமிழக மக்களால் புறக்கணிக்கப்படுவோம் என்று பயந்து உள்ளே வெளியே ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள் அதிமுகவினர். தமிழ்நாட்டை அழிக்க நினைக்கின்ற பாஜகவும், அண்ணா பெயரால் கட்சி நடத்தி அதை பாஜகவிடம் அடகு வைத்த அதிமுகவும் வேறு வேறு அல்ல.

நாணயம் இல்லாத நாணயத்தின் இரு பக்கங்கள். அரசியல்வாதிகளை தாண்டி ஊடகவியலாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்களிடம் அத்துமீறல், மிரட்டல் மற்றும் அடக்குமுறையை ஏவுகிறது பாஜக. இப்படிப்பட்ட சோசியல் வைரஸை தான் நாம் துணிச்சலுடன் எதிர்த்து நிற்கிறோம்.

என் மனைவி துர்கா ஸ்டாலின் எந்த கோயிலுக்கு செல்கிறார் என்பதை பின் தொடர்வதை பாஜகவினர் ஒரு வேலையாக வைத்துள்ளனர். அங்கே சென்று புகைப்படம் எடுத்துவிட்டு, இதை பார்த்தீர்களா! துர்கா ஸ்டாலின் கோயிலுக்கு போகிறார்.. என சமூக வலைதளங்களில் புகைப்படத்தை பரப்புவார்கள்.

தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா கோயில்களுக்கும் தான் என் மனைவி செல்கிறார். அது அவருடைய தனிப்பட்ட விருப்பம் அதை நான் எந்த காலத்திலும் தடுக்க விரும்பவில்லை தடுக்கவும் தேவை இல்லை. நான் ஆரிய ஆதிக்கத்திற்கு தான் எதிரியே தவிர ஆன்மீகத்திற்கு அல்ல. சமூக வலைதளங்களில் நாம் பதிவிடும் கருத்துக்கள் சில நொடிகளில் மக்களிடம் சென்று சேர்ந்து விடுகிறது.

நம் கருத்துக்கள் தமிழகத்தை தாண்டி இந்தியா முழுமைக்கும் ஒலிக்க வேண்டும். எதிரிகள் நம்மை இழிவு செய்தாலும் கண்ணியமாக பதில் தர வேண்டும். நான் உங்களுடைய ஃபாலோவர். நான் சொல்லும் செய்திகளை நீங்கள் லைக் செய்வீர்கள் என நினைக்கிறேன். லைக் மட்டும் செய்தால் போதாது, ஷேர் செய்ய வேண்டும்.

இணையத்தில் இயக்கத்துக்காக உணர்வுப்பூர்வமாக போராடும் நீங்கள், ஃபயர் வால். பாராட்டுகளைப் போல உங்கள் விமர்சனங்களையும் வரவேற்கிறேன். உங்கள் விமர்சனத்தை ஆன்டி வைரஸ் அலர்ட்டாகத்தான் நான் பார்க்கிறேன். நாங்கள் சொல்ல முடியாததை, தயங்குவதை உங்களால் சொல்ல முடியும்.

நம் இயக்கம் பேசிப்பேசி எழுதி எழுதி வளர்ந்த இயக்கம். அதனால் நெகட்டிவ் பிரசாரம் மூலம் எதிரியை வீழ்த்துவதைவிட, பாசிட்டிவ் பிரசாரம் மூலம் நம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

Last Updated :Oct 21, 2023, 7:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.