ETV Bharat / state

பாஜகவை வீழ்த்த ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்

author img

By

Published : Jun 8, 2023, 7:48 AM IST

கருணாநிதி நூற்றாண்டுத் தொடக்க விழாப் பொதுக்கூட்டத்தில் பாஜகவை வீழ்த்துவதற்கு ஜனநாயக சக்திகள் அனைத்தும் இந்தியா முழுமைக்கும் ஒன்று சேர வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

பாஜகவை வீழ்த்த ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டும் என மு க ஸ்டாலின் பேச்சு
பாஜகவை வீழ்த்த ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டும் என மு க ஸ்டாலின் பேச்சு

சென்னை: புளியந்தோப்பு பின்னி மில் மைதானத்தில் நேற்று (ஜூன் 7) நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கருணாநிதி நூற்றாண்டுத் தொடக்க விழாப் பொதுக்கூட்டத்தில் கட்சித் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “1949ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் நாள் கொட்டும் மழையில் ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டதே, அதே வடசென்னையில் அவரது நூற்றாண்டு விழா தொடங்குகிறது. ஓராண்டு முழுவதும் கருணாநிதியின் பிறந்தநாளை, அவரது நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாட இருக்கிறோம்.

இந்தக் கொண்டாட்டங்களின் மூலமாக கருணாநிதிக்கு இதுவரை கிடைக்காத புதிய புகழைச் சேர்க்கப் போகிறோம் என்பது இல்லை. ‘நான் சீமான் வீட்டுப் பிள்ளை அல்ல, சாமானியர் வீட்டுப் பிள்ளை’ என்று சொன்னவர் கருணாநிதி. அவரது ஆட்சியே சாமானியர்களுக்கான ஆட்சிதான்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியே ஏழை எளிய, பாட்டாளிகள் பயன்பெறும் ஆட்சியாகத்தான் இருக்கும். திராவிட முன்னேற்றக் கழகம் முதல் முறை ஆட்சிக்கு வந்தபோது ‘முரசொலி’ இதழில் கருணாநிதி ‘ஏழை குலத்தில் உதித்த ஒரு தமிழன் ஏறுகிறான் அரசு கட்டில், இனி ஏழைக்கு வாழ்வு வந்தது’ என்று எழுதினார்.

ஏழைக் குலத்தில் உதித்த ஒரு தமிழன், அண்ணா, கருணாநிதி இவர்களுடைய ஆட்சி ஏழைகள் சிரிக்கும் ஆட்சி. குடிசை மாற்று வாரியம், ஆதிதிராவிடர் வீட்டு வசதி வாரியம், தொழுநோயாளிகள் இல்லம், பிச்சைக்காரர் மறுவாழ்வு மையங்கள், ஏழைகளுக்குக் கண்ணொளி திட்டம், கைம்பெண்கள் மறுவாழ்வுக்கு நிதி, தரிசு நிலங்களை ஏழைகளுக்கு வழங்குதல், வேளாண் தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி வழங்க கணபதியாப்பிள்ளை ஆணையம், நகர்ப்புறத் தொழிலாளர் ஊதியத்தை நிர்ணயம் செய்ய கார்த்திகேயன் ஆணையம் ஆகியவற்றை உருவாக்கினார்.

மேலும், வேளாண் தொழிலாளர்கள் குடியிருந்த மனைகள் அவர்களுக்கே சொந்தமாக்கும் வகையில் குடியிருப்பு மனைச் சட்டம், கை ரிக்ஷாவை ஒழித்து, இலவச சைக்கிள் ரிக்சா வழங்கும் அற்புதமான திட்டம், ஊனமுற்றோர் நல்வாழ்வுத் திட்டம், அவர்களுக்கான தொழிற்சாலைகள் அமைத்தது, மாற்றுத்திறனாளிகள் என்று அழைத்து அந்தச் சொல்லுக்குச் சட்ட அங்கீகாரம் தந்தவர் கருணாநிதி.

இந்தியாவிலேயே முதன்முதலாக உழவர்களுக்கு இலவச மின்சாரம் கொடுத்ததும் கருணாநிதி. ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மகளிருக்கு இலவசக் கல்வி வழங்கினார். ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித் திட்டம் கொண்டு வந்தார். குடும்பத் தலைவரை இழந்து தவிக்கும் மகளிருக்கு உதவித் திட்டம் கொண்டு வந்தார்.

மாணவர்களுக்கு இலவசப் பேருந்து பாஸ் வழங்கியது. அனைவருக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், அமைப்பு சாராத் தொழிலாளர் வாரியம் அமைத்தது, உழவர் சந்தைகள் அமைத்ததும் கருணாநிதிதான். சமத்துவபுரங்கள் உருவாக்கியது என இப்படி நாள் முழுவதும் சொல்லிக் கொண்டே போகலாம்.

அந்தளவுக்கு ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட, ஏழை எளிய மக்களுக்கான ஆட்சியாகத் தமிழ்நாட்டு ஆட்சியை வடிவமைத்துக் கொடுத்தவர்தான் கருணாநிதி. இந்த மேடையில் இருக்கும் அனைத்துத் தோழமை இயக்கங்களுக்குமான வழிகாட்டி. அதனால்தான், அவரது புகழைப் போற்ற அனைத்து தலைவர்களும் இங்கே ஒரு சேர வந்திருக்கிறார்கள்.

தான் ஒரு அரசியல் கட்சியின் தலைவர், ஒரு மாநிலத்தின் தலைவர் என்ற எல்லைகளைக் கடந்து உலகத் தலைவராகச் செயல்பட்டவர் கருணாநிதி. ஒரு கருத்தியலின் தலைவராக கருணாநிதி இருந்தார். கடந்த காலப் பெருமிதங்களோடு நிகழ்காலச் செயல்பாடுகளை இணைத்தவர். நிகழ்காலச் செயல்பாடுகளோடு எதிர்கால இலக்குகளைத் தீர்மானித்தவர் அவர்.

இன்றைக்கு ‘திராவிட மாடல்’ என்ற கோட்பாட்டோடு நாம் ஆட்சி நடத்தி வருகிறோம் என்றால், அந்த திராவிடவியல் நிர்வாகக் கோட்பாட்டுக்கு அடித்தளம் அமைத்தவரும் கருணாநிதிதான். சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம், இன உரிமை, மொழிப்பற்று, மாநில சுயாட்சி ஆகியவைகளை உள்ளடக்கிய உன்னதமான கோட்பாடுதான் திராவிடக் கோட்பாடு.

திராவிடம் என்ற சொல்லைப் பார்த்து இன்றைக்கு சிலர் பயப்படுகிறார்கள். கண்ணை மூடிக்கொண்டு விதண்டாவாதம் செய்து கொண்டு இருக்கிறார்கள். ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்பதே திராவிடத்தின் உள்ளடக்கம். எல்லார்க்கும் எல்லாம் வாய்த்துவிடக் கூடாது என்று நினைப்பவர்கள்தான் திராவிட மாடலை எதிர்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

படிப்பு மறுக்கப்பட்ட சமூகத்துக்கு படிப்பைக் கொடு. கல்லூரிக் கல்வியை அடைய முடியாதவர்க்கு கல்லூரிக் கல்வியைக் கொடு. ஏழை, எளிய விளம்பு நிலை மக்களின் சமூகப் பங்களிப்பை அதிகப்படுத்து. வர்ணம், சனாதனத்தின் பேரால் ஒதுக்கப்படுபவர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளைப் பெற்றுத் தா, ஆணுக்கு நிகர் பெண்.

பெண்களுக்குப் பொருளாதார விடுதலையை வழங்கு. பெருந்தொழில்களை மட்டுமல்ல, சிறுதொழில்களையும் வளர்த்தெடு. நகர்ப்புறப் பகுதிகளோடு கிராமப்புறங்களும் செழிக்க வேண்டும். அனைத்துத் தொழில்களும் சிறக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களும் வளம் பெற வேண்டும். மாநிலத்தின் வளம் என்பது, மாநில மக்களின் சிந்தனை வளர்ச்சியில் தெரிய வேண்டும். இதுதான் திராவிட மாடல் வளர்ச்சி” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்த வளர்ச்சிகள்தான் தமிழ்நாடு என்ற மாநிலத்தை இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாக வளர்க்கப் போகிறது. நாளையே இது நடந்து விடும் என்று சொல்லும் கற்பனைவாதி அல்ல நான். ஆனால், திராவிட மாடலே அதனைச் செய்து காட்டும் என்ற நம்பிக்கை கொண்டவன் நான்.

அந்தத் தன்னம்பிக்கையைப் பெற்றிருக்கிறேன் என்று சொன்னால், இந்த தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் என்னுள் விதைத்தவர்தான் கருணாநிதி. நான் அவரது கொள்கை வாரிசு. எனவே, அண்ணா போட்டுத் தந்த பாதையில், கருணாநிதி உருவாக்கிக் கொடுத்த திட்டங்களின் மூலமாக கடந்த 50 ஆண்டு காலத்தில் தமிழ்நாடு அடைந்த பயனை நாட்டு மக்களுக்குச் சொல்லக் கூடிய வாய்ப்பாகத்தான் இந்த நூற்றாண்டு விழாவை நான் பார்க்கிறேன்.

கன்னியாகுமரி தொடங்கி கும்மிடிப்பூண்டி வரை தமிழ்நாட்டில் கருணாநிதி கால் படாத இடமில்லை. சந்திக்காத மனிதர்களில்லை. தொடங்காத திட்டமில்லை. உருகாத தொண்டர்கள் இல்லை. இப்படி ஊர்தோறும், நகர்தோறும், கிராமம்தோறும் விழா எடுக்கத் தொடங்கினால், நூற்றாண்டு விழாவையே பத்து ஆண்டுகளுக்கு கொண்டாட வேண்டி வரும்.

அத்தகைய கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகத்தான், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் சென்னை கிண்டியில் அமைக்கப்படும் கருணாநிதி நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை. மதுரையில் கலைஞர் நினைவு நூலகம், திருவாரூரில் கலைஞர் கோட்டம் ஆகியவற்றைத் திறந்து வைக்க இருக்கிறோம்.

ஆகஸ்ட் 7ஆம் நாள் அன்று சென்னை கடற்கரையில் கருணாநிதி நினைவகம் திறப்பு விழா காண இருக்கிறது. தமிழ்நாட்டின் திரும்பும் திசை எல்லாம் நிறுவனங்களையும், தமிழ்நாட்டுத் தலைவர்கள் பெயரால் நினைவுச் சின்னங்களையும் உருவாக்கிய கருணாநிதி பெயரிலான சின்னங்கள் மாதந்தோறும் திறக்கப்பட இருக்கின்றன.

இதற்கிடையேதான் ஜனநாயகப் போர்க்களமான நாடாளுமன்றத் தேர்தல் களம் நமக்காக காத்திருக்கிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் என்பது யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்று தீர்மானிப்பதை விட, யார் ஆட்சி அமைத்து விடக் கூடாது என்பதை தீர்மானிக்கும் தேர்தலாக அமைய வேண்டும்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றத்துக்காக நடக்கும் தேர்தல் சடங்கு அல்ல. 2024 நாடாளுமன்றத் தேர்தல். இந்தியாவில் ஜனநாயக அமைப்பு முறையையும், இந்தியாவில் கூட்டாட்சிக் கருத்தியலையும் காப்பாற்றுவதற்காக, இந்தியா முழுவதும் உள்ள பாஜகவுக்கு எதிரான ஜனநாயக சக்திகள் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகள், மாறுபாடுகளை மறந்து இந்தியாவைக் காப்பாற்ற ஒன்று சேர்ந்தாக வேண்டும்.

அறிவாலயத்தில் இருந்து இந்தக் கூட்டத்திற்கு நான் புறப்பட்டு காரில் வந்து கொண்டிருந்தபோது, பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் நிதிஷ் குமார் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். வருகிற 23ஆம் தேதி முடிவு செய்யப்பட்டிருக்கிறது. நீங்கள் பீகார் மாநிலத்திற்கு வர வேண்டும். அகில இந்திய அளவில் இருக்கும் தலைவர்கள் எல்லாம் ஒன்று சேர அந்தக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.

இங்கே பேசிய தலைவர்கள் எல்லாம் சொன்னார்களே, தமிழ்நாட்டில் எவ்வாறு ஒரு ஜனநாயக ஆட்சி உருவாகுவதற்கு ஒரு கூட்டணி அமைத்தோமோ, அதுபோல் இந்தியாவில் ஜனநாயகம் காப்பாற்றப்படுவதற்கு, ஒரு கூட்டணி அமைந்திட வேண்டும் என்று இன்றல்ல, தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன்.

என்னை வந்து சந்திக்கும் அகில இந்தியத் தலைவர்களிடம் தொடர்ந்து சொல்லி வருகிறேன். மாநிலக் கட்சிகளின் தலைவர்கள், மாநில முதலமைச்சர்களிடமும் வலியுறுத்தி வருகிறேன். மதவாத, பாசிசவாத, எதேச்சாதிகார பாஜகவை வீழ்த்துவதற்கு ஜனநாயக சக்திகள் அனைத்தும் அகில இந்தியா முழுமைக்கும் ஒன்று சேர வேண்டுமே தவிர, தேவையற்ற முரண்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. பிரிவினைகளால் பாஜக வெல்லப் பார்க்கும்.

சாதியால், மதத்தால் பிரிவினையை விதைக்கும் அந்தக் கட்சி, அரசியல் கட்சிகளின் முரண்பாடுகளின் மூலமாக வெல்லப் பார்க்கும். அதற்கு அகில இந்தியத் தலைவர்கள், மாநிலக் கட்சித் தலைவர்கள், மாநிலங்களின் முதலமைச்சர்கள் யாரும் இரையாகி விடக் கூடாது. எத்தகைய பொய்யையும் சொல்ல பாஜகவினர் தயங்க மாட்டார்கள்.

அவதூறுகளை அள்ளி வீசவும் அதனைப் பரப்பவும் பாஜகவிடம் ஏவலுக்கு கீழ்படியவும் சிந்தனையற்ற, வெறுப்புணர்ச்சியால் மழுங்கடிப்பட்ட ஒரு கூட்டம் இருக்கிறது. அதற்கு தமிழ்நாட்டில் ஆளுநராக இருக்கும் அவர் செய்து கொண்டிருக்கும் சித்து விளையாட்டுகளை எல்லாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

பொறுத்தது போதும், பொங்கி எழுவோம் என்ற அந்த உணர்ச்சியோடு இன்று நாங்கள் கிளம்பி இருக்கிறோம். எதை வேண்டுமானாலும் பேசட்டும், எங்களுக்குக் கவலை இல்லை. மக்கள் நம்மோடு இருக்கிறார்கள். ஒற்றுமையின் மீது, சகோதரத்துவத்தின் மீது, மதச்சார்பின்மையின் மீது, உண்மையான வளர்ச்சியின் மீது, இந்த நாட்டின் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்கள், நம்மோடு இருக்கிறார்கள்.

நம் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எனவே, நமது உள்ளத்தை ஒற்றுமையால் கட்டமைப்போம். நீ, நான் என்றால் உதடு ஒட்டாது. நாம் என்றால்தான் உதடுகள் கூட ஒட்டும் என்று கருணாநிதி அடிக்கடி சொல்வார். அவரது நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களோடு இந்திய ஜனநாயகத் திருவிழாவையும் நாம் கொண்டாடும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

எனவே, அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல் நமக்காக அல்ல. நாட்டிற்காக, ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக நடைபெறும் தேர்தல் என்பதை மனதில் வைத்து, இந்த விழாவில் உறுதி எடுப்போம். சபதம் ஏற்போம். அதுதான் கருணாநிதிக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்கும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னையில் ரூ.1000 கோடி நிலம் மீட்பு; 33 ஆண்டு சட்டப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.