ETV Bharat / state

எண்ணூர் எண்ணெய் கழிவு விவகாரம்; பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.8.68 கோடி நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 23, 2023, 2:47 PM IST

Ennore Oil Spill Relief Fund: புயலின்போது பெய்த கனமழையில், எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் வெள்ள நீரோடு கலந்து வந்த எண்ணெய் கழிவு கசிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, கூடுதல் நிவாரணம் வழங்கிட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

CM MK Stalin ordered a relief fund for Ennore oil spill-affected people
எண்ணூர் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்

சென்னை: மிக்ஜாம் புயலின்போது பெய்த கனமழையில், எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் சென்னை பெட்ரோ கெமிக்கல் நிறுவன வளாகத்திலிருந்து வெள்ள நீரோடு கலந்து வந்த எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, 8 கோடியே 68 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கொசஸ்தலை ஆற்றின் எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதியன்று ஏற்பட்ட எண்ணெய் கசிவினை அகற்றிட, தமிழக அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்நிகழ்வில் காட்டுக்குப்பம், சிவன்படைகுப்பம், எண்ணூர் குப்பம், முகத்துவாரக்குப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், வ.உ.சி நகர், உலகநாதபுரம் மற்றும் சத்தியவாணி முத்து நகர் ஆகிய கடலோர மீனவ கிராமங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளில் எண்ணெய் படிந்து சேதம் ஏற்பட்டது.

மேலும், இக்கிராமங்களைச் சார்ந்த மீனவர்கள் எண்ணெய் கசிவினால் மீன்பிடித் தொழிலுக்குச் செல்ல இயலாததால், அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. இதைக் கருத்தில் கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி, அத்தொகையும் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, எண்ணெய் கசிவினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 301 குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணத் தொகையாக தலா 12 ஆயிரத்து 500 ரூபாயும், மேலும் எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட 787 மீன்பிடி படகுகளைச் சரி செய்திட, படகு ஒன்றிற்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதமும், மொத்தம் 3 கோடி ரூபாய் அரசினால் ஒப்படைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இந்த நிவாரணத் தொகை பாதிக்கப்பட்ட மீனவர்களின் வங்கிக் கணக்கிற்கு தற்போது வரவு வைக்கப்பட்டு வருகிறது. மேலும் சென்னை மாநகராட்சி மண்டலம் வார்டு 1, 4, 6 மற்றும் 7 ஆகிய பகுதிகளில் எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட 6 ஆயிரத்து 700 குடும்பங்களுக்கு தலா ரூ.7 ஆயிரத்து 500 வீதம், மொத்தம் 5 கோடியே 2 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கிட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிவாரணத் தொகையினை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். எனவே, மிக்ஜாம் புயல் கன மழையினால் ஏற்பட்ட எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட 9 ஆயிரத்து 1 குடும்பங்களுக்கு, 8 கோடியே 68 லட்சம் ரூபாய் வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விரைவில் நிவாரண உதவி வழங்க நடவடிக்கை - தலைமைச் செயலாளர் உறுதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.