ETV Bharat / state

இனி தமிழகத்தின் 8 நகரங்களில் ‘சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’ - தமிழக அரசு அறிவிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 19, 2023, 10:51 PM IST

Namma Ooru Thiruvizha: சென்னை மாநகரத்தில் பொங்கல் விழாவினை ஒட்டி 4 நாட்கள், 18 இடங்களில் நடைபெற்ற ‘சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’ அனைத்து தரப்பு மக்களின் வரவேற்பினை பெற்றதால், எட்டு முக்கிய நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தின் 8 நகரங்களில் ‘சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’ - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தின் 8 நகரங்களில் ‘சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’ - தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: ‘சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’ என்ற பெயரில் கோயம்புத்தூர், தஞ்சாவூர், வேலூர், சேலம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், மதுரை மற்றும் திருச்சி ஆகிய 8 இடங்களில் நாட்டுப்புறக் கலை விழாக்கள் அக்டோபர் முதல் டிசம்பர் வரை 2023-இல் முதற்கட்டமாக நடத்தப்படும் என்று தமிழக அரசு சார்பில் இன்று (செப்.19) அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நாட்டுப்புறக் கலைகளையும், கலைஞர்களையும் பேணி வளர்ப்பதற்கும், தமிழ் மக்களின் பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டாடுவதற்கும், கலைஞர்களுக்கு நல்வாய்ப்புகளை ஏற்படுத்தவும் ‘சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’ என்ற பெயரில் கோயம்புத்தூர், தஞ்சாவூர், வேலூர், சேலம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், மதுரை மற்றும் திருச்சி ஆகிய 8 இடங்களில் நாட்டுப்புறக் கலை விழாக்கள் அக்டோபர் முதல் டிசம்பர் வரை இந்த ஆண்டில் முதற்கட்டமாக நடத்தப்படும்.

இக்கலை விழாவின் வாயிலாக சுமார் 3,000 நாட்டுப்புறக் கலைஞர்கள் பயன் பெறுவர். அதனைத் தொடர்ந்து சென்னையில் ஜனவரி 2024-இல் பொங்கல் பண்டிகையின்போது, தமிழ்நாட்டின் நாட்டுப்புறக் கலைகள், அயல் மாநில நாட்டுப்புறக் கலைகள், செவ்வியல் கலைகள் இடம் பெறும் வகையில் பிரம்மாண்ட ‘சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’ பல்வேறு இடங்களில், தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையால் நடத்தப்பட உள்ளது. இக்கலைவிழாவின் வாயிலாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் பயன் பெறுவர்.

‘சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவில்’ பங்கு பெற விரும்பும் கலைக் குழுக்கள், தங்கள் கலைத் திறமையை வெளிப்படுத்தும் வகையில் 5 நிமிட வீடியோவினை குறுந்தகடு (CD) அல்லது பென் டிரைவ்-இல் (Pen Drive) பதிவு செய்து, அத்துடன் கலை பண்பாட்டுத் துறையின் இணையதளத்தில் (www.artandculture.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, விண்ணப்பத்தில் கோரியுள்ள விபரங்களை முழுமையாக பூர்த்தி செய்து, தொடர்புடைய கலை பண்பாட்டுத் துறையின் மண்டல கலை பண்பாட்டு மைய அலுவலகங்களுக்கு 06.10.2023-க்குள் பதிவுத் தபாலில் (Registered Post) அனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கலை பண்பாட்டுத்துறையால் அமைக்கப்படும் தேர்வுக் குழுவால் தகுதியான கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, ‘சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவின்’ கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்புகள் அளிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கலைஞர் மகளிர் உரிமை தொகை: நிராகரிக்கப்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.