ETV Bharat / state

மரபணு மாற்றப்பட்ட கடுகிற்கு மத்திய அரசு அனுமதி - பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கண்டனம்!

author img

By

Published : Oct 30, 2022, 10:19 PM IST

மரபணு மாற்றப்பட்ட கடுகை திறந்தவெளியில் பயிரிடுவதற்கும் மற்றும் பரிசோதனை செய்வதற்கும் அனுமதி வழங்கிய மத்திய அரசுக்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Central
Central

சென்னை: மரபணு மாற்றப்பட்ட கடுகை திறந்தவெளியில் பயிரிடுவதற்கும் மற்றும் பரிசோதனை செய்வதற்குமான அனுமதியை வழங்கும்படி மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு, அத்துறையின்கீழ் இயங்கி வரும் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு (Genetic Engineering Appraisal Committee) கடந்த 18ஆம் தேதி பரிந்துரை செய்துள்ளது. இதற்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "DMH-11(Dhara Mustard Hybrid-11) என்கிற மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை டெல்லி பல்கலைக்கழகத்தின் மரபணு மாற்று பயிர்களுக்கான மையம் (Centre for Genetic Manipulation of Crop Plants (CGMCP) உருவாக்கியுள்ளது. மரபணு மாற்று தொழில் நுட்பத்தின் மூலம் Bar, Barnese மற்றும் மற்றும் Barstar என்னும் மரபணுக்கள் கடுகின் மரபணுக்களோடு சேர்க்கப்பட்டு, இந்தப் புதிய கடுகு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மரபணுக்கள் Bacillus amyloliquefaciens, Streptomyces hygroscopicus ஆகிய பாக்டீரியாக்களில் இருந்து எடுக்கப்பட்டவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

Bacillus amyloliquefaciens பாக்டீரியாவிலிருந்து எடுக்கப்படும் இந்த மரபணுக்கள் கடுகின் ஆண் தன்மையை நீக்கவும், பெண் தன்மையை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இப்படிச் செய்வதற்கான காரணம் என்னவெனில், இயல்பாகவே கடுகு தன்பால் மகரந்தச்சேர்க்கையும், அயல் மகரந்தச் சேர்க்கையும் செய்யக்கூடியது. மரபணு மாற்றத்தின் மூலம் தன்பால் மகரந்தச்சேர்க்கையை கட்டுப்படுத்தினால், அயல் மகரந்தச்சேர்க்கை அதிகரிக்கும். அதன் மூலம் விளைச்சல் அதிகரிக்கும் என்று வாதிடுகிறார்கள்.

Streptomyces hygroscopicus எனும் பாக்டீரியாவிலிருந்து எடுக்கப்பட்ட மரபணுவை கடுகில் சேர்ப்பதால் பூச்சித் தாக்குதலுக்கு எதிரான சத்துக்களை அதிகரிக்கும் எனவும் அரசு கூறுகிறது. இந்த நிலையில்தான் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகிற்கான அனுமதியை கடந்த 18ஆம் தேதி வழங்கியுள்ளனர்.

டெல்லி பல்கலைக்கழகம் தங்களது மரபணு மாற்று கடுகின் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளாக Bio Safety Research Level(BRL)-I(2010-2011, 2011-2012) மற்றும் BRL- II (2014-2015) எனும் ஆய்வுகளைக் குறிப்பிடுகிறது. GEACயின் அறிவுறுத்தலுக்குப் பின்பாக புதிய ஆய்வுகளை மேற்கொண்டதற்கான எவ்வித ஆவணங்களையும் தரவுகளையும் டெல்லி பல்கலைக்கழகம் சமர்ப்பிக்கவில்லை. கடுகு குடும்பத்தைச் சார்ந்த Canola என்கிற பயிரை Bar, Barnese, Barstar மூலமாக மரபணு மாற்றம் செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட பயிருக்கான அனுமதியை கனடா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் வழங்கியுள்ளன.

வேறு பாக்டீரியாவைக் கொண்டு மாற்றம் செய்யப்பட்ட வேறு பயிர்களின் மீது நடத்தப்பட்ட வேறு நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை DMH-11-க்காக ஆதாரங்களாக சமர்ப்பிப்பது மக்களை ஏமாற்றும் செயல். இந்த ஆதாராங்களை ஏற்று GEAC அனுமதி வழங்கியுள்ளது கண்டனத்திற்குரியது. அதேபோல, இக்கடுகால் பிற பயிர்களில் ஏற்படும் தாக்கம் குறித்தான ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவில்லை.

டெல்லி பல்கலைக்கழகம் சமர்ப்பித்த ஆய்வுகளை மதிப்பீடு செய்வதற்கு 25.08.2022-ல் ஒரு நிபுணர் குழுவை GEAC அமைத்தது. அக்குழுவானது உலகளவில் பெறப்பட்ட ஆய்வுகள், பல அமைச்சகங்களின் பரிந்துரையின் அடிப்படையிலும், மேற்கூறிய மூன்று மரபணுக்களும் மகரந்தச்சேர்க்கையில் ஈடுபடும் தேனீக்கள் மற்றும் பிற வண்டுகள் மீது பாதிப்புகளை ஏற்படுத்தாது எனக்கருத்து தெரிவித்தது. போதுமான ஆய்வுகளும், தரவுகளும் இல்லாமல் டெல்லி பல்கலைக்கழகம் சமர்ப்பித்த அறிக்கைகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு பாதிப்புகள் இல்லை என்ற முடிவுக்கு நிபுணர் குழு வந்திருக்கக்கூடாது.

மேலும், மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு அதை உருவாக்கிய நிறுவனங்கள் காப்புரிமை கோர முடியும். மரபணு மாற்றப்பட்ட DMH-11 கடுகிற்கு காப்புரிமை பெற்ற நிறுவனத்தின் அனுமதியோடுதான் அதனை விற்பனையோ அல்லது மறு உற்பத்தியோ செய்ய முடியும். இது விவசாயிகளின் விதை உரிமையைப் பறிக்கும் செயலாகும். மக்களின் உணவு இறையாண்மையின் மீதான தாக்குதலும் கூட. இந்தக் கடுகிற்கு அனுமதி வழங்கப்பட்டால் மரபணு மாற்றப்பட்ட உணவிற்கு வழங்கப்படும் முதல் பண்டமாக இருக்கும். FSSAI அனுமதி அளிக்கும் பட்சத்தில் இந்த மரபணு மாற்றப்பட்ட ( ஆண் தன்மை நீக்கப்பட்ட) கடுகு விரைவில் நம் உணவில் இடம் பெறலாம்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர்களான கருணாநிதியும், ஜெயலலிதாவும் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை கடுமையாக எதிர்த்தனர். அதே நிலைப்பாட்டில் தமிழ்நாடு அரசும் மத்திய அரசின் ஆபத்தான இம்முயற்சியை எதிர்க்க வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலையத்திட்டத்தை அரசு கைவிட்டு மாற்றுவழியை செயல்படுத்தலாம் - பூவுலகின் நண்பர்கள் குழு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.