ETV Bharat / state

"குட்கா முறைகேடு வழக்கில் 2 பேருக்கு எதிராக விசாரிக்க அனுமதி கிடைக்கவில்லை" - சிபிஐ தகவல்!

author img

By

Published : Jun 26, 2023, 5:09 PM IST

குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் இன்னும் இரண்டு பேருக்கு எதிராக மட்டும் விசாரணை மற்றும் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் தொடர்பாக மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை என நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு தெரிவித்துள்ளது.

CBI informed
குட்கா முறைகேடு

சென்னை: தமிழ்நாட்டில் குட்கா பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு சென்னை செங்குன்றம் பகுதியில் உள்ள கிடங்கில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விநியோகம் செய்ய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதற்கான ஒரு டைரியை பறிமுதல் செய்தனர். அந்த டைரியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்ய தமிழ்நாடு அமைச்சர்கள் மற்றும் மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிகிறது.

அந்த சர்ச்சையில் அப்போதைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் பி.வி.ரமணா, தமிழக காவல்துறையின் முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், அரசு அதிகாரிகள் பழனி, செந்தில்வேலவன் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபட்டன.

இந்த குட்கா முறைகேடு தொடர்பாக திமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. பின்னர் வழக்குப்பதிவு செய்த சிபிஐ, கிடங்கு உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேரை கைது செய்தது.

இந்த வழக்கில் சிபிஐ போலீசார் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், கைது செய்யப்பட்டுள்ள மாதவராவ் உள்ளிட்ட 6 பேரின் பெயர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தது. முன்னாள் அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெறவில்லை.

இதனிடையே முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி அனுமதி வழங்கியது. இதனையடுத்து 11 பேருக்கு எதிராக சிபிஐ தரப்பில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் பல்வேறு தவறுகள் இருப்பதால், அதனை திருத்தம் செய்தும், வழக்கில் உள்ள சாட்சிகள் குறித்த விபரங்கள் மற்றும் அவர்களின் வாக்கு மூலம் குறித்த விபரங்களையும், குற்றம்சாட்டபட்டவர்களுக்கு எதிரான மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் விசாரணை அனுமதி தொடர்பான விபரங்களை இணைத்தும் குற்றப்பத்திரிகையை முழுமையாக தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று (ஜூன் 26) சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில், "பழைய திருத்திய குற்றப்பத்திரிகை இன்னும் தயாராகவில்லை. குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கு எதிரான விசாரணை மற்றும் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் தொடர்பாக இன்னும் மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை. மற்றவர்களுக்கு எதிராக அனுமதி கிடைத்துவிட்டது. எனவே வழக்கில் கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும்" என கோரிக்கை விடுக்கப்பட்டது.

அப்போது நீதிபதி, அனுமதி கிடைக்காத நிலையில் வழக்கை எப்படி நடத்துவது? என சிபிஐக்கு கேள்வி எழுப்பினார். பின்னர் வழக்கு விசாரணையை ஜூலை 17ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை என்று காரணத்திற்காகவே, கடந்த டிசம்பர் 15ஆம் தேதி முதல் இன்று வரை பத்து முறை விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: குட்கா முறைகேடு வழக்கு - திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சிபிஐக்கு அவகாசம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.