ETV Bharat / state

காவிரி மேலாண்மை வாரிய போராட்ட வழக்கு: முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட எழுவர் விடுவிப்பு

author img

By

Published : Jul 28, 2021, 7:47 PM IST

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடத்திய வழக்கிலிருந்து திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட ஏழு தலைவர்களை விடுவித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்

2018ஆம் ஆண்டு, ஏப்ரல் 4ஆம் தேதி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தி, திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் முழு அடைப்புப் போராட்டமும் ஆா்ப்பாட்டமும் நடத்தின.

அப்போது சென்னை அண்ணா சாலையில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் திருநாவுக்கரசா், மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன், காங்கிரஸ் கட்சியிலிருந்த கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனா்.

தொடர்ந்து, அனுமதியின்றி போராட்டம் நடத்தியது தொடர்பாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஸ்டாலின், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் அனுமதியின்றி கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளிலும், நுகர்வோர் பாதுகாப்பு சட்ட பிரிவிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை, சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி - எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அலிசியா முன்பு நடைபெற்று வந்தது. முன்னதாக இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஏற்கனவே வழக்கு விசாரணைக்கு தடை விதித்திருந்தது.

சென்னை சிறப்பு நீதிமன்றம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள சென்னை சிறப்பு நீதிமன்றம்

இந்த நிலையில் இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் இன்று (ஜூலை.28) விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்து தலைவர்கள் மீதான வழக்குகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக அரசு பிறப்பித்த உத்தரவை சுட்டிக்காட்டி, உத்தரவு நகலை சமர்ப்பித்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரையும் இந்த வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சோனியா - மம்தா சந்திப்பு: பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.