ETV Bharat / state

தடை செய்யப்பட்ட பிஎஸ்-4 இன்ஜின் வாகனங்கள் முறைகேடாகப்பதிவு - நடவடிக்கை எடுக்க உத்தரவு!

author img

By

Published : Jan 19, 2023, 6:02 PM IST

தமிழ்நாடு போக்குவரத்து துறையில் பிஎஸ்-4 இன்ஜின் வாகனங்களை முறைகேடாக பதிவு செய்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளும்படி, டிஜிபிக்கு தமிழ்நாடு உள்துறைச் செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

bs4 engines
bs4 engines

சென்னை: காற்று மாசுவை குறைக்கும் நோக்கில், கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம், பிஎஸ்-4 இன்ஜின் வாகனங்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

2020 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிதாக விற்கப்படும் மற்றும் வாங்கப்படும் வாகனங்கள் பிஎஸ்-6 இன்ஜினை கொண்டிருக்க வேண்டும் என்றும், பிஎஸ்-4 இன்ஜின் வாகனங்களைப் பயன்படுத்தவோ, பதிவு செய்யவோ கூடாது எனவும் உத்தரவிடப்பட்டது. இதனால் பல வாகன உற்பத்தி நிறுவனங்கள் தயார் செய்த பிஎஸ்-4 இன்ஜின் வாகனங்கள் தேக்க நிலையை அடைந்தன.

இந்நிலையில் தேக்கமடைந்த பல பிஎஸ்-4 இன்ஜின் வாகனங்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு, ஆர்.டி.ஓ அலுவலகங்களில் முறைகேடாக பதிவு செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்த புகார்களின் அடிப்படையில் போக்குவரத்து துறை சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. அதில், பிஎஸ்-4 இன்ஜின் வாகனங்கள் 2020ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது போல முறைகேடாக பதிவாகியிருந்தது தெரியவந்தது.

இதேபோல், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு ஆர்.டி.ஓ அலுவலகங்களில் முறைகேடாக 399 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக விசாரணையில் தெரியவந்தது. இந்த முறைகேடு தொடர்பாக போக்குவரத்து துறை செயலாளர் அறிக்கையைத் தயார் செய்து, தமிழ்நாடு உள்துறைச் செயலாளர் பணீந்திர ரெட்டிக்கு அனுப்பினார். இந்த மோசடி தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி டிஜிபிக்கு உள்துறைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து பிஎஸ்-4 இன்ஜின் வாகனங்கள் எத்தனை ஆர்.டி.ஓ அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது?. இந்த முறைகேட்டில் தொடர்புடைய வாகன உற்பத்தியாளர்கள், முகவர்கள் மற்றும் ஆர்டிஓ உள்ளிட்ட போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஐபிஎஸ் அலுவலர் வரதட்சணை கேட்ட வழக்கு.. ரூ.11 லட்சம் இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.