ETV Bharat / state

சென்னை விமானநிலையத்தில் தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போன் பறிமுதல்; பயணியிடம் விசாரணை

author img

By

Published : Sep 11, 2022, 7:57 PM IST

சென்னை விமானநிலையத்தில், அமெரிக்கா செல்லும் சென்னை பயணியிடம், இந்திய அரசால் தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விமானநிலையத்தில் தடை செய்யப்பட்ட சாட்டிலைட் பறிமுதல்
சென்னை விமானநிலையத்தில் தடை செய்யப்பட்ட சாட்டிலைட் பறிமுதல்

சென்னை: சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று அதிகாலை 4 மணிக்கு புறப்படத் தயாராகிக்கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளை சென்னை விமான நிலையம் பாதுகாப்பு அலுவலர்கள், சோதனை நடத்தி அனுப்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ஜனார்த்தனன் (40) என்பவர் இந்த விமானத்தில், துபாய் வழியாக அமெரிக்கா செல்ல வந்தார். விமானநிலையப்பாதுகாப்பு அலுவலர்கள் அவரை சோதித்தபோது, அவர் நம் நாட்டில் தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போன் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை விமானத்துக்குள் அனுப்பாமல் நிறுத்தி வைத்து விசாரித்தனர்.

அப்போது அவர், 'தான் அமெரிக்காவில் மென்பொருளாளராகப் பணியாற்றுகிறேன். கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி அமெரிக்காவிலிருந்து, துபாய் வழியாக இதே விமானத்தில் தான் சென்னைக்கு வந்தேன். அப்போதே இந்த சாட்டிலைட் போன்தான் நான் எடுத்து வந்தேன். ஏனென்றால் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் சாட்டிலைட் போன் பயன்படுத்துவதற்குத் தடை இல்லை. அதைப்போல் நான் வரும்போது சென்னை விமானநிலையத்தில் சுங்கத்துறை உட்பட எந்த சோதனையிலும், சாட்டிலைட் போன் கொண்டுவரக்கூடாது என்று தடுக்கவில்லை. இந்தியாவில் தடை செய்யப்பட்டது என்று கூறவும் இல்லை. எனவே, நான் இப்போது இதை இங்கிருந்து எடுத்துச்செல்கிறேன்' என்று கூறினார்.

ஆனால், பாதுகாப்பு அலுவலர்கள், இந்தியாவில் சாட்டிலைட் போனை பயன்படுத்துவதற்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. எனவே, இந்திய அரசின் தடையை மீறி நீங்கள் சாட்டிலைட் போனை பயன்படுத்தி இருக்கிறீர்கள். இது சட்டப்படி குற்றம் என்று கூறினா். அதோடு அவருடைய அமெரிக்க பயணத்தையும் ரத்து செய்தனர். சேட்டிலைட் போனையும் பறிமுதல் செய்தனா்.

அதன்பின்பு மேல் நடவடிக்கைக்காக சென்னை விமான நிலையம் போலீசில், பயணியையும், சாட்டிலைட் போனையும் பாதுகாப்பு அலுவலர்கள் ஒப்படைத்தனர். போலீசார் இது சம்பந்தமாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். நமது நாட்டில் பாதுகாப்புத்துறையில் மட்டுமே சாட்டிலைட் போனை பயன்படுத்த முடியும்; மற்றபடி பொதுமக்கள் யாரும் சாட்டிலைட் போன் பயன்படுத்தக்கூடாது. ஆனால், பயங்கரவாதிகள் ரகசியமாக சாட்டிலைட் போனை பயன்படுத்துகிறார்கள் என்பதால், இந்திய அரசு சாட்டிலைட் போனை பயன்படுத்தக்கூடாது என்ற அரசின் உத்தரவை மீறி, யாராவது சாட்டிலைட் போனை பயன்படுத்தினால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னை விமானநிலையப் போலீசாா், பயணி ஜனாா்த்தனன் இந்தியா வந்த பின்பு, சாட்டிலைட் போனை பயன்படுத்தி யாரிடமாவது பேசியுள்ளாரா? அவ்வாறு பேசியிருந்தால் யாரிடம் பேசியிருக்கிறாா் என்று தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:Audio Leak: கட்டட அனுமதி சான்றுக்கு லஞ்சம் கேட்கும் பஞ்சாயத்து அலுவலக ஊழியர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.