ETV Bharat / state

அதிமுக கொடி, சின்னத்தைப் பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 7, 2023, 1:14 PM IST

Updated : Nov 7, 2023, 3:53 PM IST

O.Panneerselvam: அதிமுக கட்சியின் கொடி, பெயர், சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக கொடி, சின்னத்தைப் பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு தடை
அதிமுக கொடி, சின்னத்தைப் பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு தடை

சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக கட்சியின் கொடி, பெயர், சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த 2022 ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக் குழுவில், ஒற்றை தலைமையைக் கொண்டு வந்த தீர்மானத்திற்கும், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட நான்கு பேரை நீக்கிய தீர்மானத்துக்கும் தடை விதிக்க, சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மறுத்து தீர்ப்பளித்திருந்தது.

இந்நிலையில், அதிமுக கட்சி, சின்னம் ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்து பயன்படுத்த தடை விதிக்கக் கோரி, அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த செப்டம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதில், அதிமுக பொதுச் செயலாளராக தன்னை தேர்தல் ஆணையமும், உயர் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ள நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என ஓ.பி.எஸ் தொடர்ந்து கூறிவருவதாகவும், இது தொண்டர்களிடையே குழப்பத்தை விளைவிப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, ஓ.பி.எஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, இந்த வழக்கு இன்று (நவ.07) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இ.பி.எஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, “இந்த வழக்கு மூன்றாவது முறையாக விசாரணைக்கு வருகிறது. இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை. தன்னை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தது செல்லும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாகக் கூறி அவகாசம் வாங்கினார்கள். ஆனால் அதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என வாதிட்டார்.

ஓ.பி.எஸ் தரப்பில் வழக்கறிஞர் ராஜலட்சுமி ஆஜராகி, “உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு நம்பர் ஆகிவிட்டது என்றும், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய குறுகிய கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். அப்போது நீதிபதி சதீஷ்குமார், “எத்தனை முறை இந்த விவகாரத்தில் இரு தரப்பும் இப்படி வழக்கு தொடர்வீர்கள்? அவகாசம் கேட்பீர்கள்?. ஒரே வாதத்தை எத்தனை முறை வைப்பீர்கள்?” என கேள்வி எழுப்பினார்.

மீண்டும் இ.பி.எஸ். தரப்பில், நான்கைந்து மாதங்களில் முக்கியமான நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் ஒருங்கிணைப்பாளர் என்கிற பதவியை பன்னீர்செல்வம் பயன்படுத்துகிறார். அதிமுக-வில் உள்ள தங்களை கட்சியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். பொதுமக்கள் மற்றும் கட்சியில் இவர்கள் குழப்பம் ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்” என வாதிடப்பட்டது.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்த மனுக்களை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை என்பதால், அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் நடைபெற்ற ஐடி ரெய்டு.. வங்கிக்குச் சென்ற 2 சூட்கேஸ்கள்!

Last Updated : Nov 7, 2023, 3:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.