ETV Bharat / state

கருணாநிதி மல்டி ஸ்பெஷலிட்டி மருத்துவமனையில் அவுட்சோர்சிங்-ல் பணியாளர்கள் நியமனம்.. யாருக்கு பயன் தரும்?

author img

By

Published : Jun 11, 2023, 8:39 PM IST

கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பன்நோக்கு மருத்துவமனையில் 500-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் தற்காலிகம் மற்றும் அவுட்சோர்சிங் முறையில் நியமனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து இந்த செய்தித் தொகுப்பு அலசுகிறது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள 'கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனை'-யில் 1,000 படுக்கைகளுக்கு 133 மருத்துவர்கள், 72 செவிலியர்கள் மட்டுமே நிரந்தர பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள அனைத்து பணியிடங்களும் அவுட்சோர்சிங் முறையில் பணியமர்த்தப்படுகின்றனர். மேலும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், துப்பரவு பணியாளர்கள் என 508 பேர் தொகுப்பூதியம், அவுட்சோர்சிங் முறையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் உள்ள கிண்டியில் 1,000 படுக்கைகள் வசதிகளுடன் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பன்நோக்கு சிறப்பு மருத்துவமனை (M.Karunanidhi Centenary Memorial Government Multi Super Specialty Hospital) அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் உயர்தர சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ள நிலையில், இதற்காக 1,000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பன்நோக்கு சிறப்பு மருத்துமனையை வரும் 15ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு (Droupadi Murmu President of India) திறந்து வைக்க உள்ளார்.

இந்த நிலையில் மருத்துவமனையில் பணியாற்றுவதற்கான மருத்துவப் பணியிடங்களுக்கு அனுமதி அளித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலளார் ககன்தீப்சிங் பேடி உத்தரவிட்டுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டியூட் வளாகத்தில் புதிதாக 240.54 கோடி ரூபாய் செலவில் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையில் சிறுநீரகவியல் (Urology), இருதயவியல் (Cardiology), கதிரியக்கவியல் (Radiology), நரம்பியல் (Neurology), நுண்ணுயிரியல் (Microbiology), மயக்கவியல் (Anesthesiology), புற்றுநோய் அறுவையியல் (Oncology), நரம்பியல் அறுவை சிகிச்சை (Neurosurgery), இரைப்பை குடல் அறுவை சிகிச்சை மருத்துவம் (Gastrointestinal Surgery), ரத்தநாள அறுவை சிகிச்சை (Vascular Surgery), ரத்தமாற்று சிகிச்சை (Transfusion Treatment), அவசர சிகிச்சைப் பிரிவு (Emergency ward), சலவை, சமையல் துறை, நிர்வாகத்துறை உட்பட 23 துறைகள் செயல்பட உள்ளது.

மேலும், இந்த மருத்துவமனையில் 60 செவிலியர்கள் நிரந்தர பணியாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர். 133 மருத்துவர்கள் மட்டுமே நிரந்தர பணியாளர்களாக பணியமர்த்தப்படுகின்றனர். அவர்களில், 103 மருத்துவர்கள் ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கு கலந்தாய்வு நடத்தி பணியிடமாற்றம் வழங்கப்பட உள்ளது. சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் கூடுதலாக இருப்பதால், அதிலிருந்து 30 பேர் பணியிடமாற்றம் அடிப்படையில் பணியாற்ற உள்ளனர்.

அதேபோல், செவிலியர்களும் பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து இந்த மருத்துவமனைக்கு பணியிடமாறுதல் செய்யப்பட உள்ளனர். 23 துறைகள் இயங்கக்கூடிய இந்த மருத்துவமனையில் இணை பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஆயிரம் படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனைக்கு 133 மருத்துவர்கள் மட்டுமே நியமிக்கப்பட உள்ளனர். இந்த நிலையில், மீதமுள்ள மருத்துவர்களை அவுட்சோர்சிங் முறையில் பணியமர்த்த அனுமதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவ பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் என 249 நிரந்தரப் பணியிடத்திலும், 508 பேர் தற்காலிக அடிப்படையில் தொகுப்பூதியத்திலும் நிரப்பப்பட உள்ளது.

கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில் 508 பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட உள்ளது. மாதம் 18000 தொகுப்பூதியத்தில் தற்காலிக அடிப்படையில் 300 செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்களான டயாலிசிஸ் தொழில்நுட்ப பணியாளர்கள் (Dialysis Technicians) 15, அறுவை அரங்கு தொழில்நுட்ப பணியாளர்கள் (Operating theater technicians) 8, ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்கள் (Lab Technicians) 15, கேத் லேப் தொழில்நுட்ப பணியாளர்கள் (Cath Lab Technicians) 4, இசிசி தொழில்நுட்ப பணியாளர்கள் (ECC Technicians) 6 என 98 பேர் மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் நியமிக்கப்பட உள்ளனர். அதேபோல் டேட்டா என்டரி ஆபரேட்டர் , அலுவலக உதவியாளர் பணியில் 10 பேரும் நியமிக்கப்பட உள்ளனர். மேலும் 100 பல்நோக்கு பணியாளர்கள் (Multipurpose workers) மாதம் 12 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் நியமிக்கப்பட உள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

பணி மாறுதல் மூலம் நியமனம்: இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, "கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில் நிரந்தரப் பணியிடத்தில் ஏற்கனவே, வேறு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் பணியாற்றி வருபவர்கள் பணி மாறுதல் மூலம் நியமனம் செய்யப்படுவர் என்றார். இதனைத்தொடர்ந்து தற்காலிக அடிப்படையிலான பணிகளுக்கு மருத்துவமனையில் தொகுப்பூதிய அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்" எனத் தெரிவித்தார்.

இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சாந்தி கூறும்போது, "தமிழ்நாட்டில் அரசு கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையை குறுகிய காலத்திலும் விரைவாகவும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்றார். மேலும், 500 படுக்கையுடன் துவக்கப்படும் என அறிவித்து, 1,000 படுக்கைகளுடன் துவக்கப்பட உள்ளது என்று வெகுவாகப் பாராட்டினார்.

பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த கோரிக்கை: ஆனால், அதேநேரத்தில் கலைஞர் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில் 500-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் தற்காலிகம் மற்றும் அவுட்சோர்சிங் முறையில் நியமனம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது வருத்தம் அளிக்கிறது. ஏற்கனவே பணியில் உள்ள மருத்துவர்களை பணியிட மாறுதல் அளித்து நியமனம் செய்வது போல், செவிலியர் உள்ளிட்ட பிற பணியாளர்களையும் ஏற்கனவே தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணியில் உள்ளவர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தி கலைஞர் கருணாநிதி பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில் பணியமர்த்த வேண்டும்" என தெரிவித்தார்.

ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தல் கிடையாது: இதன் பின்பு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, "மருத்துவத்துறையில் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்படமாட்டார்கள் எனக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பேசிய அவர், கலைஞர் கருணாநிதி பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை உட்பட அனைத்து தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளுக்கும் தேவைப்படும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டப் பணியாளர்களை, உடனடியாக மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் காலமுறை ஊதியத்தில் (Periodic Pay) நிரந்தரமாக பணிக்கு எடுத்து அமர்த்த வேண்டும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஓய்வூதியதாரர்கள் தொடர்பான புதிய அரசாணையை ரத்து செய்க: தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.