ETV Bharat / state

3 கோயில்களில் விரைவில் முழுநேர அன்னதானம் - அமைச்சர் சேகர்பாபு தகவல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 20, 2023, 9:11 AM IST

Annadhanam scheme: 3 திருக்கோயில்களில் முழுநேர அன்னதானத் திட்டத்தையும், 7 திருக்கோயில்களில் ஒருவேளை அன்னதானத் திட்டததை விரைவில் தொடங்கி வைக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

3  கோயில்களில் விரைவில் முழுநேர அன்னதானத் திட்டம்
3 கோயில்களில் விரைவில் முழுநேர அன்னதானத் திட்டம்

சென்னை: திருக்கோயில்களில் வழங்கப்படும் அன்னதானம் மற்றும் பிரசாதங்களின் தரத்தை உறுதி செய்து பதிவேற்றும் செயலியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில், திருக்கோயில்களில் வழங்கப்படும் அன்னதானம் மற்றும் பிரசாதங்களை உணவு பாதுகாப்பு ஆலோசகர்கள் தரம் உறுதி செய்து செயலி மூலம் பதிவேற்றும் திட்ட துவக்க விழா நடைபெற்றது. இந்த திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

இப்பணிகளை மேற்கொள்ளும் குவெஸ்ட் செர்டிபிகேஷன் பிரைவேட் லிமிடெட் (Quest Certification Pvt Ltd) நிறுவனத்திற்கு அதற்கான பணி ஆணை வழங்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது, "இரண்டு திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வந்த நாள் முழுவதுக்குமான அன்னதானத் திட்டம், 8 திருக்கோயில்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், 754 திருக்கோயில்களில் வழங்கப்பட்டு வந்த ஒருவேளை அன்னதானத் திட்டம் 764 திருக்கோயில்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டு நாள்தோறும் சுமார் 82 ஆயிரம் பக்தர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்தாண்டு பெரியபாளையம், மேல்மலையனூர், ஆனைமலை ஆகிய 3 திருக்கோயில்களில் முழுநேர அன்னதானத் திட்டமும், 7 திருக்கோயில்களில் ஒருவேளை அன்னதானத் திட்டமும் தொடங்கப்பட உள்ளது.

மேலும், சட்டமன்ற அறிவிப்பின் படி, திருக்கோயில்களில் வழங்கப்படும் அன்னதானம் மற்றும் பிரசாதம் தரத்தோடு இருப்பதனை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மூலம் உறுதி செய்து செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை மேற்கொள்ள குவெஸ்ட் செர்டிபிகேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனம் ஒவ்வொரு திருக்கோயிலிலும் ஆண்டிற்கு மூன்று முறை ஆய்வு செய்து அங்கு தயாரிக்கப்படும் உணவு தரமாக உள்ளதா எனவும், சமையல் கூடம், உணவருந்தும் கூடம் சுத்தமாக பாராமரிக்கப்படுகிறதா எனவும் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளிக்கும்.

மாதந்தோறும் குறைந்தபட்சம் 125 திருக்கோயில்களை ஆய்வு செய்வதற்கு திட்டமிட்டு இருக்கின்றோம். அதனடிப்படையில் உணவு கூடங்களை மேம்படுத்துவது, சமைக்கின்ற உணவின் தரம் குறைவாக இருப்பின் அதனை உயர்த்துவது குறித்து முடிவெடுத்து பாதுகாப்பான, தரமான உணவை பக்தர்களுக்கு வழங்குவோம்.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வசதியானது இருக்கின்ற குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கு பெரும் உதவியாக அமையும். திருக்கோயில்கள் குறித்த தகவல்களை பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்கனவே செயல்பட்டு வரும் திருக்கோயில் செயலியை இதுவரையில் 25 ஆயிரம் நபர்கள் டவுன்லோட் செய்து இருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: எரிபொருள் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணம்.. 3 மாதத்தில் விலை மாற்றம் - தமிழக அரசின் நடவடிக்கை என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.