ETV Bharat / state

2015 ஆம் ஆண்டு வெள்ளத்துக்கு பின் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? - நீதிபதிகள் காட்டம்

author img

By

Published : Nov 9, 2021, 12:17 PM IST

மழை வெள்ள பாதிப்புகள் குறித்து அதிருப்தி தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், 2015 ஆம் ஆண்டு வெள்ளத்துக்கு பின் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என சென்னை மாநகராட்சிக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

2015 flood
2015 flood

சென்னை: வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் சென்னையில் முக்கிய சாலைகள், குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்து பொதுமக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் சாலை அகலப்படுத்துவது, நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று (நவ.9) விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்துக்கு பின், உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள பல கோடி ரூபாயில் திட்டங்கள் தீட்டப்பட்ட போதும், தற்போது சென்னை மழை நீரில் தத்தளிப்பதாக வேதனை தெரிவித்தனர்.

2015 ஆம் ஆண்டு வெள்ளத்துக்கு பின் அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என மாநகராட்சி தரப்புக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஒரு வாரத்தில் நிலைமையை சரி செய்ய வேண்டும் எனவும், இல்லாவிட்டால் நீதிமன்றம் தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்கும் என எச்சரித்தனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.