ETV Bharat / state

தமிழ்நாட்டில் போயிங் விமான பாகங்கள் தயாரிப்பு- முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம்

author img

By

Published : Sep 27, 2021, 1:15 PM IST

தமிழ்நாட்டில் முதன்முறையாக போயிங் விமான நிறுவனத்திற்கு முக்கிய விமான பாகங்களை தயாரித்து வழங்கும் ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வழங்கப்பட்டது.

aerospace-engineering-pvt-ltd-signed-agreement-with-boeing-for-aircraft-parts-production-in-tamilnadu
தமிழ்நாட்டில் போயிங் விமான பாகங்கள் தயாரிப்பு- முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம்

சென்னை: இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதன்முறையாக போயிங் விமான நிறுவனத்திற்கான முக்கிய விமான பாகங்களை தயாரித்து வழங்க, சேலத்தில் உள்ள ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட்டுக்கான ஒப்பந்த உத்தரவை போயிங் இந்தியா நிறுவனத்தின் விநியோக மேலாண்மை இயக்குநர் அஸ்வனி பார்கவா வழங்க, ஏரோஸ்பேஸ் இன்ஜினீயர்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் ஆர்.சுந்தரம் பெற்றுக்கொண்டார்.

சேலத்தில் அமைந்துள்ள ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் உலகளாவிய விண்வெளி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கான முக்கிய விமான பாகங்கள் தயாரித்து வழங்குவதற்கு நீண்ட கால ஒப்பந்தத்தை போயிங் இந்தியா நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளது.

இந்த ஒப்பந்தம் தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் தரம், துல்லியம் மற்றும் கூட்டு கலாச்சாரத்தின் அர்ப்பணிப்புக்கான சான்றாகும்.

சேலம், ஓசூர் உள்ளிட்ட தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் வழித்தடத்திலுள்ள வளர்ந்து வரும் விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்களுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கும்.

ஏரோஸ்பேஸின் படிப்படியான வளர்ச்சி

ஏரோஸ்பேஸ் நிறுவனம் 1988ஆம் ஆண்டு ஒரு குறுந்தொழில் நிறுவனமாகத் தொடங்கப்பட்டு. படிப்படியாக வளர்ந்து சிறு நிறுவனமாகவும், தற்போது நடுத்தர நிறுவனமாகவும் உயர்ந்துள்ளது.

மூன்று தசாப்தங்களுக்கு மேலாக, ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் வாடிக்கையாளர்களுக்கு உயர் துல்லியம், உயர்தர பாகங்களை தயாரித்து வழங்குவதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனம், பல தொழில்நுட்பரீதியாக மேம்பட்ட உற்பத்தித் திறன்கள், செயல்முறைகள். தனித்துவமான சோதனை வசதிகள், பல விமான தகுதி சார்ந்த தரச் சான்றிதழ்களைக் கொண்டுள்ளது.

Made In Tamil Nadu

ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்ஸ் நிறுவனம், ரூ. 150 கோடி முதலீட்டில் அடுத்த 24 மாதங்களில் ஓசூரில் 1,25,000 சதுர அடி பரப்பளவு கொண்ட கட்டிடத் தளத்தில் சிவில் ஏரோஸ்பேஸ் உற்பத்திக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புதிய உற்பத்தி வசதியையும், தற்போது சேலத்தில் அமைந்துள்ள உற்பத்திக் கூடத்தை 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது.

இந்த கூடுதல் வசதி 1,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் . இந்த சாதனை தமிழ்நாடு முதலமைச்சரின் தொலைநோக்கு பார்வையான Made In Tamil Nadu என்பதின் ஒரு படியாக அமையும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'Made in Tamilnadu என்ற குரல் ஒலிக்க வேண்டும்' - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.