ETV Bharat / state

எதிர்கட்சி துணைத்தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்க வேண்டும் - அதிமுகவினர் சபாநாயகரிடம் கடிதம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 22, 2023, 6:07 PM IST

TN Assembly Deputy Opposition Leader seat: சட்டப்பேரவை எதிர்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் சபாநாயகரிடம் கடிதம் வழங்கியுள்ளனர்.

அதிமுகவினர் சபாநாயகரிடம் கடிதம்!
அதிமுகவினர் சபாநாயகரிடம் கடிதம்!

சென்னை: தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 9ஆம் தேதி கூட உள்ள நிலையில், சட்டப்பேரவையில் எதிர்கட்சித் துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமனம் செய்ய வேண்டும். ஓ பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் ஆகியோர் இருக்கைகளை மாற்றம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், "அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுகவினர் அனைவரும் ஒருங்கிணைந்து தீர்மானம் நிறைவேற்றி, சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்க வேண்டும் என்று ஏற்கெனவே இரண்டு முறை சபாநாயகரிடம் கடிதம் அளித்திருந்தோம். இன்று மூன்றாவது முறையாக கடிதம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதுவரையில் சபாநாயகர், எதிர்கட்சித் துணைத் தலைவர் இருக்கை வழங்குவது பரிசீலனையில் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். எங்களைப் பொறுத்தவரையில், நீங்கள் எங்களுக்கு ஒதுக்க வேண்டிய இடத்தை ஒதுக்கித் தர வேண்டும். இதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி நடந்தபோது, எதிர்கட்சித் தலைவராக இன்றைய முதல்வர் ஸ்டாலின், துணைத் தலைவராக இன்றைய நீர்வளத்துறை அமைச்சரான துரைமுருகனுக்கு இருக்கை ஒதுக்கி ஆணை பிறப்பிக்கப்பட்டது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், எதிர்கட்சித் தலைவராக தேமுதிக தலைவர் விஜயகாந்தும், துணைத் தலைவராக பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோருக்கு ஒதுக்கி ஆணை பிறப்பிக்கப்பட்டது. இது சட்டமன்ற விதி, மரபின் அடிப்படையில் நிறைவேற்றப்படும் ஒன்றாக இருந்து வருகிறது" என கூறினார்.

தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுக உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து, சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கும் இயக்கத்துக்கு, சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்க வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் சபாநாயகர் அதனை பரிசீலிப்பதாக கூறியதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவர்கள் கொடுத்துள்ள கடிதத்தில், "சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை எங்களுக்கு கொடுக்கிறீர்களா, இல்லையா?" என்பதை கடிதம் மூலம் எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று தெளிவாக வலியுறுத்தி உள்ளதாகவும், கடிதத்துக்கான பதில் கிடைத்தவுடன் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார் என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி குளறுபடி; நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நிறுவனம் மீது வழக்குப் பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.