ETV Bharat / state

என்.எல்.சி. நிலம் கையகப்படுத்துதல் விவகாரம் - திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

author img

By

Published : Jan 23, 2022, 2:09 PM IST

புதிதாக தொடங்கப்பட உள்ள என்.எல்.சியின் மூன்றாம் சுரங்கத்திற்கான இழப்பீட்டு நிவாரணத்தை நியாயமாக வழங்கக் கோரும் அப்பகுதி மக்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்றிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

என்.எல்.சி. நிலம் கையகப்படுத்துதல் விவகாரம்
என்.எல்.சி. நிலம் கையகப்படுத்துதல் விவகாரம்

சென்னை: முன்னாள் முதலமைச்சர், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜன.23) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"என்.எல்.சி. என்று அழைக்கப்படும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் ஜம்புலிங்கம் முதலியார் முயற்சியாலும், நெய்வேலி மக்களின் தியாகத்தாலும், நாட்டுப் பற்றாலும், அக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வழங்கியதன் காரணமாக, 1956ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கியது.

தொடர்ந்து நெய்வேலி அனல்மின் நிலையமும் தொடங்கப்பட்டது. மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில், லாபத்துடன் இயங்கும் ஒருசில நிறுவனங்களில் என்.எல்.சியும் ஒன்றாகும். லாபத்தில் இயங்கும் இந்நிறுவனத்தின் பங்குகளை மத்திய அரசு விற்க
முயன்றபோது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என்.எல்.சி. தொழிலாளர்களின் நலனுக்காக தமிழ்நாடு அரசின் சார்பாக சுமார் 5 விழுக்காட்டுப் பங்குகளை வாங்கினார்.

இந்நிறுவனத்தில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் மீதும், அதற்கு நிலம் வழங்கியவர்கள் மீதும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அரசுக்கும், எனது தலைமையிலான அரசுக்கும் இருந்த அக்கறையும் கரிசனமும் இந்த விடியா திமுக அரசுக்கு இல்லாதது வேதனைக்குரியது.

என்.எல்.சி அறிவிப்பு

தற்போது என்.எல்.சி. நிறுவனம் தனது மூன்றாவது சுரங்கத்தை அமைப்பதற்காக 26 கிராமங்களில் சுமார் 12,500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது. பெரும்பாலான கிராமங்கள், கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதியில் அமைந்துள்ளன.

இந்நிலையில் மத்திய அமைச்சர் அவர்கள் காணொலி மூலம் 17.1.2022 அன்று என்.எல்.சி. நிறுவனத்தின் புதிய மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வுத் திட்டத்தை அறிவித்துள்ளார்.

இதன்படி, நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்படும் விளை நிலங்களுக்கு, ஏக்கருக்கு 23 லட்சம் ரூபாயும், வீட்டு மனைகளுக்கு, ஊரகப் பகுதிகளில் சென்ட்டுக்கு 40,000 ரூபாயும், நகரப் பகுதிகளில் 75,000 ரூபாயும் வழங்கப்படும் என்றும், மேலும், மறு குடியமர்வுக்காக 2,178 சதுர அடி மனையில், 1,000 சதுர அடியில் வீடு கட்டித் தரப்படும் என்றும் என்.எல்.சி. நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், நிலம் வழங்குவோருக்கு நிரந்தர வேலை வழங்க முடியாது என்றும், ஒப்பந்த வேலை வாய்ப்பு அல்லது அதற்கான இழப்பீடாக 10 லட்சம் ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் என்றும் என்.எல்.சி. நிர்வாகம் அறிவித்துள்ளது.

மக்களுக்கு ஆதரவாக நடந்துகொள்ளாத அமைச்சர்கள்

என்.எல்.சி. நிறுவனம், பாதிக்கப்படும் கிராமங்களில் உள்ள மக்களிடமோ, விவசாயிகளிடமோ, அப்பகுதியின் மக்கள் பிரதிநிதிகளிடமோ கருத்துகளைக் கேட்காமல், கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களுக்கான புதிய மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வுத் திட்டத்தை ஒருதலைபட்சமாக அறிவித்திருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது.

இந்த அறிவிப்பை ஒரு விழுக்காடு மக்கள்கூட ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

17.1.2022 அன்று என்.எல்.சி. நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள், தங்களுடைய சந்தேகத்தை, கேள்வியை எழுப்பியபோது, அதற்கு சரியான பதில் அளிக்காமல் பாதியிலேயே நிர்வாகம் கூட்டத்தை முடித்துக்கொண்டது.

அப்போது, அதில் கலந்துகொண்ட இரண்டு திமுக அமைச்சர்களும், மக்களுக்கு ஆதரவாக நடந்துகொள்ளாமல், நிர்வாகத்துடன் இணைந்து கூட்டத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டது, அப்பகுதி மக்களுக்கு மிகுந்த வேதனையை அளித்தது.

என்.எல்.சி. மூன்றாவது சுரங்கத்திற்காக கையகப்படுத்தப்பட உள்ள நிலங்கள், ஏக்கர் ஒன்றுக்கு, ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் தரக்கூடிய நல்ல விளைச்சல் நிலங்களாகும்.

ஒரு ஏக்கர் நிலத்தின் இன்றைய சந்தை மதிப்பு சுமார் ரூ. 50 லட்சத்திற்கும் மேல் ஆகும். அதேபோல், இன்று ஒரு சென்ட் வீட்டு மனை நிலத்தின் சந்தை மதிப்பு ரூ. 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை விலை உள்ளது என்று கூறிய அப்பகுதி மக்கள், அதற்கேற்றவாறு நில இழப்பீட்டு மதிப்பை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

நிலம் வழங்கிய மண்ணின் மைந்தர்களுக்கே வேலை இல்லை

மேலும், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, வசதியும் இழந்து பரம்பரைத் தொழிலான விவசாயத்தையும் இழக்கின்ற சூழ்நிலையில், தங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை சில ஆண்டுகளிலேயே செலவு செய்துவிட்டு, வறுமையின் பிடியில் சிக்கிக்கொள்ளக் கூடிய நிலையை கருத்திற்கொண்டு, நிலம் வழங்கிய குடும்பத்தினருக்கு என்.எல்.சி. நிறுவனம் நிரந்த வேலைவாய்ப்பை வழங்க வேண்டும்
என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

1956ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட என்.எல்.சி. நிறுவத்தின் ஆண்டு வருமானம் இன்று சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. 1977-89 காலகட்டத்தில் நிலம் வழங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 1,827 பேருக்கு மட்டுமே பணி வழங்கப்பட்டது.

அவர்கள் அனைவரும் இப்போது ஓய்வு பெற்றுவிட்டனர். இன்றைய தேதியில் சுமார் 11,510 நிரந்தரப் பணியாளர்கள் பணிபுரியும் இந்நிறுவனத்தில், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை இந்நிறுவனத்திற்காக வழங்கிய 44 கிராமங்களைச் சேர்ந்த மண்ணின் மைந்தர்கள் எவரும் இன்று பணிபுரியவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

தற்போது, என்.எல்.சிக்கு நிலம் வழங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 3,500 நபர்கள் மட்டுமே குறைந்த ஊதியத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக, தினக் தொழிலாளர்களாக, தினக் கூலிகளாக பணிபுரிந்து வருகின்றனர். ஏற்கெனவே, 2ஆம் சுரங்கத்திற்காக நிலம் வழங்கியவர்கள் நிலத்தின் மதிப்பை உயர்த்தவும், நிரந்தர வேலை வழங்கக்கோரியும், என்.எல்.சி. நிறுவனத்திடம் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

திமுக அரசுக்கு கோரிக்கை

எனது தலைமையிலான அதிமுக அரசு, டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததைத் தொடர்ந்து, தற்போது புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதியும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தின் கீழ் உள்ளது.

எனவே, இச்சட்டத்தைக் கருத்திற்கொண்டு, நிர்வாகம், நில உரிமையாளர்கள், சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் அடங்கிய ஒரு குழுவை அமைத்து, இப்பகுதி மக்களின் நில இழப்பீடு மற்றும் நிலத்தை இழந்த குடும்பத்தினருக்கு நிரந்தர வேலை ஆகிய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற சுமுகமான முடிவை எடுக்க வேண்டும் என்று நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தையும், இதற்கான முழு முயற்சிகளையும் இந்த திமுக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

ஏக்கர் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த அப்போதைய எதிர்க் கட்சியான திமுக, ஆளும் கட்சியானவுடன் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, 17.1.2022 அன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட இரண்டு திமுக அமைச்சர்களும், நிர்வாகத்துடன் இணைந்து, கூட்டத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டமைக்கு, என்.எல்.சி. நிர்வாகத்திற்கும்,
இந்த விடியா அரசுக்கும், கூட்டத்தில் கலந்து கொண்ட இரண்டு திமுக அமைச்சர்களுக்கும், அதிமுக சார்பாக எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கே.பி. அன்பழகனுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.