ETV Bharat / state

தமிழகத்தில் வெண்புள்ளிகள் இல்லாத நிலை கொண்டு வர நடவடிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

author img

By

Published : Jun 26, 2023, 12:30 PM IST

தமிழகத்தில் எந்த மருத்துவமனைகளிலும் வெண்புள்ளிகள் என்ற பெயர் இல்லாத நிலை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

Action to bring the state of non-existence of the name Venkushtam in Tamil Nadu - Minister Ma Subramanian
தமிழகத்தில் வெண்குஷ்டம் என்ற பெயர் இல்லாத நிலை கொண்டு வர நடவடிக்கை - அமைச்சர் மா சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் எந்த மருத்துவமனைகளிலும் வெண்புள்ளி என்ற பெயர் இல்லாத நிலை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கேரளாவில் பரவி வரும் மர்ம காய்ச்சல் தமிழகத்தில் இல்லை எனவும், இருப்பினும் எல்லையோரப் பகுதிகளில் 13 இடங்களில் தொடர் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மேலும் அவர், தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவக் கல்வி வழங்க எந்த தடையும் இல்லை என்றும்; அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது எனவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி மகளிர் கல்லூரியில் "உலக வெண்புள்ளிகள் தினத்தை" முன்னிட்டு "சேர்ந்து வரைவோம்" மற்றும் விழிப்புணர்வு உறுதியேற்பு நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு மாணவர்களிடையே வெண்புள்ளி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், ''வெண்புள்ளிகள் குறித்த விழிப்புணர்வு, 20 ஆண்டுகளுக்கு மேல் நடத்தப்பட்டு வருகிறது. உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்களில், வெண்குஷ்டம் என்ற பெயரை மாற்றி, வெண் புள்ளிகள் என்று சொல்ல வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் அரசாணையை மேற்கோள் காட்டி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
வெண்புள்ளிகள் பாதித்தவர்களை பள்ளிகளில் பாகுபாடு பார்க்கக் கூடாது என்று, ஒரு அரசாணையையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. 2030ஆம் ஆண்டிற்குள், தொழுநோய் இல்லா தமிழ்நாடு என்ற நிலையை அடைய, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ஆஷா பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளதை பார்த்தால் நகைப்பு தான் வருகிறது. ஆஷா பணியாளர்கள் நேரடியாக பணியில் சேர்க்கப்பட்டவர்கள் இல்லை. ஒன்றிய அரசின் தேசிய நல்வாழ்வு குழுமம் சார்பில் அவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறது. திமுக ஆட்சிக்கு முன் வாங்கிய ஊதியத்தை விட 2 ஆயிரம் ரூபாய் வரை கூடுதலாக ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. தொற்றா நோய்க்கு உதவினால் 500 ரூபாய் கூடுதலாக ஊக்கத்தொகை வழங்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் மூலம் 6000 ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

உதவிப் பேராசிரியர்களை இணைப்பேராசிரியர்களாக பதவி உயர்த்துவதற்கான கலந்தாய்வு, ஜூலை 4ஆம் தேதி தொடங்க உள்ளது, 6 ஆம் தேதி தீர்ப்பு வர உள்ளது. சில மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதாக தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருந்த நிலையில் ஸ்டான்லி, தர்மபுரி, திருச்சி ஆகிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் மீண்டும் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 36 மருத்துவக் கல்லூரிகளும் செயல்பட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுவரை எந்த மர்மக் காய்ச்சலும் தமிழகத்தில் இல்லை வந்தால் பாதுகாப்போம். கேரள எல்லையோரப் பகுதிகளின் 13 இடங்களில் தொடர்ச்சியாக கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போக்குவரத்துப் பகுதியில் தொடர் கண்காணிப்பு உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் ஓய்வில் உள்ளார். டிஸ்சார்ஜ் குறித்து மருத்துவர்கள் தெரிவிப்பார்கள்’’ எனக் கூறினார்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், ''வெண்புள்ளிகள் பற்றி விழிப்புணர்வு தமிழ்நாட்டில் தொடங்கி இந்தியா முழுவதும் பரவி உள்ளது. உலகம் முழுவதும் வெண்புள்ளிகளால் உலக மக்கள் தொகையில் 1 சதவீதம் பேர் என்றால், இந்தியாவை பொறுத்த வரை 4 சதவீதமும், தமிழ்நாடு பொறுத்த வரை 37 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டு உள்ளனர் .

வெண்புள்ளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களை தனித்துவப்படுத்துவதால் அவர்கள் மன உளைச்சல் பாதிப்படைகின்றனர். 37 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருந்தால் அது 37 லட்சம் நபர்கள் என்று கூறிப்பிடுவதை விட 37 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். 2025க்குள் காசநோய் இல்லாத தமிழகம், 2030க்குள் தொழுநோய் இல்லாத தமிழகம் என்கின்ற இலக்கை நோக்கி அரசு பயணித்து கொண்டிருக்கிறது.

கோவையில் வெண்குஷ்டம் என்று சித்த மருத்துவமனையில் பெயர் பலகை வைத்திருப்பதாக கூறியிருந்த நிலையில் இதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும், மேலும் தமிழகத்தில் எந்த ஒரு இடத்திலும் வெண்குஷ்டம் என்று பெயர் பலகைகள் இல்லாதவாறு நடவடிக்கை’’ மேற்கொள்ள இருப்பதாக கூறினார். ’’துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் அறிவுரை வழங்க இருக்கிறோம் .

மேலும் வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதோ, வெறுக்கும் நிலையில் பார்க்கவோ வேண்டாம், அப்படி நடந்து கொண்டால் தமிழ்நாடு அரசு சார்பில் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

இதையும் படிங்க: போதைப்பொருள் பழக்கத்தை ஊக்குவிக்கிறார் - நடிகர் விஜய் மீது காவல் ஆணையரிடம் புகார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.