ETV Bharat / state

தேர்தல் ஆணையம் கூறியவாறு ஓபிஎஸ் தான் ஒற்றைத்தலைமை - குன்னம் ராமச்சந்திரன் திட்டவட்டம்!

author img

By

Published : Jun 30, 2022, 4:08 PM IST

ஓபிஎஸ்ஸின் தர்மயுத்தத்தின்போது பொதுச்செயலாளர் இல்லாத நிலையில், அவைத்தலைவர் மற்றும் பொருளாளருக்கே கட்சியும், சின்னமும் செல்லும் என்று தேர்தல் ஆணையம் கூறியதால் ஓபிஎஸ்தான் ஒற்றைத்தலைமை ஆக இருக்க முடியும் என குன்னம் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையம் கூறியவாறு ஓபிஎஸ் தான் ஒற்றைத்தலைமை - குன்னம் ராமச்சந்திரன் திட்டவட்டம்!
தேர்தல் ஆணையம் கூறியவாறு ஓபிஎஸ் தான் ஒற்றைத்தலைமை - குன்னம் ராமச்சந்திரன் திட்டவட்டம்!

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில், அவரது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் குன்னம் ராமச்சந்திரன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய குன்னம் ராமச்சந்திரன், "உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான ஏ, பி படிவத்தில் கையெழுத்திடுவதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், கட்சியில் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பு இல்லை எனக் கூறி ஈபிஎஸ் தரப்பினர் எங்களது கடிதத்தை திருப்பி அனுப்பி விட்டனர்.

தொண்டர்களை ஏமாற்றவே இடைத்தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி தரப்பினர் திமுகவிற்கு துணை போகும் வகையில் ஏ, பி படிவத்தில் கையெழுத்திடவில்லை. தலைமைக்கழக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க, பொருளாளர் என்ற முறையில் ஓபிஎஸ் கையெழுத்து வழங்கிவிட்டார்.

ஆனால், இணை ஒருங்கிணைப்பாளர் இன்னும் கையெழுத்திடவில்லை. எனவே ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லை. இதை வன்மையாக கண்டிக்கிறோம். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இல்லத்தை கட்சிக்கு வழங்கத் தயாராக இருப்பதாக தீபா, தீபக் ஆகிய இருவரும் ஓபிஎஸ்ஸிடம் கூறினர். இது தொடர்பாக ஈபிஎஸ்ஸிடம் கூறிய பிறகும், அவர் அதற்கு செவிமடுக்கவில்லை.

ஜெயலலிதா இல்லத்தை மக்கள் பார்வைக்கு வைக்க ஒருங்கிணைப்பாளருக்கு, ஏன் இணை ஒருங்கிணைப்பாளர் ஒத்துழைப்புத் தரவில்லை? ஜெயலலிதா இல்லத்தை பெறுவதில் நிதிச்சிக்கல் இருந்தால், என் சொந்த பணம் ரூ.10 லட்சத்தை கட்சிக்கு வழங்க தயாராக உள்ளேன். வேலுமணிக்கு (முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி) சொந்தமான இடத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவதுதற்கு ஓ.பன்னீர்செல்வம் திமுகவுடன் இணக்கமாக இருப்பதாக கூறுவது தவறு.

ஓபிஎஸ்ஸுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் திட்டத்துடன் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இவ்வாறு கூறுகின்றனர். அதிமுக சின்னத்தை எதிர்நோக்கி இருந்த தொண்டர்கள் சுயேச்சையாக போட்டியிடும் நிலையை உருவாக்கியவர் எடப்பாடி பழனிசாமி. சசிகலா பொதுச்செயலாளரானவுடன், ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தத்தின்போது பொதுச்செயலாளர் இல்லாதபோது, அவைத்தலைவர் மற்றும் பொருளாளருக்கே கட்சியும் சின்னமும் செல்லும் என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.

அப்படி என்றால் பொருளாளராக உள்ள ஓ.பன்னீர் செல்வத்துக்குத்தான் கட்சி சொந்தம்; அவரே ஒற்றைத் தலைமை. அதிமுகவின் நலன் கருதி எடப்பாடி பழனிசாமியுடன் கலந்து பேச ஓ.பன்னீர்செல்வம் எப்போதும் தயாராக இருக்கிறார்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரிய வழக்கு - விசாரிக்க மறுத்த உயர் நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.