சென்னை:பழம்பெரும் திரைப்பட வரலாற்றாசிரியரும், கட்டுரையாளரும், எழுத்தாளருமான மதபூஷி ரங்கதுரை, ராண்டார் கை என்ற புனைப்பெயரால் பிரபலமாக அறியப்பட்டவர். நீண்டகால உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 23) இரவு காலமானார். அவருக்கு வயது 86.
இவர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 50 புத்தகங்கள் மற்றும் பல ஆவணப்படங்களை எழுதியுள்ளார். 'மெமரிஸ் ஆஃப் மெட்ராஸ்' அவருடைய கடைசி புத்தகம் ஆகும். ராண்டார் கை, சென்னைப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் மற்றும் சட்டத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். வழக்கறிஞராகத் தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். சிறிதுகாலம் கழித்து பேட்டர்சன் அன்கோ என்ற நிறுவனத்தில் 5 ஆண்டுகள் பணிபுரிந்தார். 1976ஆம் ஆண்டு எழுத்துப்பணியில் முழுமையாக ஈடுபடுவதற்காக அந்த வேலையிலிருந்து விலகினார்.
ராண்டார் கை 1967லிருந்து திரைப்படம் மற்றும் வரலாற்றுப் புத்தகங்கள் எழுதி வந்தாலும் இவர் எழுதிய ஃப்ராங்க் காப்ரா (அமெரிக்க திரைப்பட இயக்குநர்) பற்றியக் கட்டுரையை அமெரிக்க நாட்டின் ஒரு செய்தி அமைப்பு வாங்கிய பின்புதான் இவர் பிரபலமானார். இவர் மயிலாப்பூர் டைம்ஸ், தி ஹிந்து மற்றும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள்களில் கட்டுரையாளராகவும் பணிபுரிந்தார். திரைப்பட இதழ் ஸ்கீரினிலும் எழுதுயிருக்கிறார். திரைப்பட வரலாற்றாளராகவும், விமர்சகராகவும் இவர் பல துறைகளிலும் எழுதி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வொயில் தி பிரேக்கர்ஸ் ரோர்ட், இந்தியன் ரிபால்ட்ரி, சாயா, காசி, மாதுரி ஒரு மாதிரி, பி. என். ரெட்டி, எ ஹிஸ்ட்ரி ஆஃப் தமிழ் சினிமா, ஸ்டார் லைட், ஸ்டார் பிரைட், ம்ர்டர் ஃபார் பிளஷர், சிட்டாலே, மான்ஸூன் ஆகிய புத்தகங்களை ராண்டார் கை எழுதியுள்ளார்.
நவம்பர் 12, 2007ஆம் ஆண்டு சமுத்ரா பத்திரிக்கையின் ஐந்தாவது ஆண்டு விழாவில் அவரது கலைப்பணியைப் பாராட்டி அவருக்கு "ஞான சமுத்ரா" விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.