ETV Bharat / state

மெர்லின் பாட்டி: 81 வயதில் ஆங்கில டீச்சராக பாடம் எடுக்கும் பாட்டியின் நெகிழ்வான கதை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 14, 2023, 10:28 PM IST

Updated : Sep 15, 2023, 10:42 PM IST

Merlin grandma video: அண்மைக் காலமாக சமூக வலைத்தளத்தில் ஆங்கில ஆசிரியையாக பிரபலமாகி வரும் மெர்லின் பாட்டியை குறித்த சிறப்பு செய்தி..

மெர்லின் பாட்டியின் கதை
மெர்லின் பாட்டியின் கதை

சென்னை: பெரும்பாலும் பொழுதுபோக்கிற்காகவே பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களில், ஒரு சில பதிவுகள் நம்மை நெகிழ்வடையச் செய்யும். அப்படி நம் கண்ணில்பட்டு, நம்மை கண் கலங்கச் செய்ததுதான் மெர்லின் பாட்டியின் பதிவு. யார் இந்த மெர்லின் என்பதை குறித்த சிறப்பு செய்தி தொகுப்பைக் காணலாம்.

சென்னையைச் சார்ந்த 25 வயது இளைஞர் முகமது ஆசிக். இவர் "abrokecollegekid" பெயரிடப்பட்ட சமூக வலைத்தள பக்கத்தில், தான் சந்திக்கும் மக்களிடம், அவர்களின் பின்னணி குறித்து கேட்டு அதை வீடியோவாக பதிவிடுவது வழக்கம். குறிப்பாக, வாழ்வில் கஷ்டங்களைச் சந்திக்கும் மக்கள், இளம் வயதில் சாதனை புரிந்தவர்கள் என மக்களைத் தேடி தேடி அவர்களின் கதையை வீடியோவாக பதிவிடுவார்.

அப்படி அவர் பதிவிடும் வீடியோக்களில் உதவி தேவைப்படும் மக்களுக்கு, உதவிகளை தானே செய்வார். இல்லையெனில் அவர் பதிவிடும் வீடியோக்களை பார்க்கும் பார்வையாளர்கள் மூலம் உதவிகளைச் செய்ய முன் வருவார்.

யார் இந்த மெர்லின் பாட்டி? சில நாட்களுக்கு முன்பாக ஒரு வீடியோ பதிவிட்டு இருந்தார். அதில் சாலையோரம் யாசகம் கேட்டு வாழும் ஒரு மூதாட்டியிடம் அவரைப் பற்றி ஆங்கிலத்தில் கேட்க, அதற்கு அந்த மூதாட்டி தன்னுடைய பெயர் மெர்லின் என்றும், தான் பர்மாவைச் சார்ந்தவர் என்றும், தன்னுடைய கணவர் சென்னையைச் சார்ந்தவர் என்பதால் சென்னைக்கு வந்ததாக கூறினார்.

மேலும், உறவினர்கள் அனைவரும் இறந்து விட்டதால் சாலையோரம் அமர்ந்து யாசகம் கேட்டு வாழ்வதாகவும், சில நேரம் உணவு கிடைத்தால் அதை உண்டு பசியைப் போக்கிக் கொள்வதாகவும், எதுவும் கிடைக்கவில்லை என்றால் பட்டினியாகவே இருப்பதாக தெரிவித்தார், 81 வயதான மெர்லின் பாட்டி.

பின்னர் முகமது ஆசிக், மெர்லின் பாட்டியிடம் சென்னை வரும் முன் பர்மாவில் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் என கேட்டதற்கு, மெர்லின் பாட்டி, தான் ஆசிரியராக பணியாற்றிதை கூறியதுதான் அனைவரையும் மனம் உருகச் செய்தது. குறிப்பாக அந்த வீடியோவில் மெர்லின் பாட்டி முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே பேசி இருப்பார்.

மீண்டும் ஆசிரியரான மெர்லின் பாட்டி: தொடர்ந்து அவரிடம் அவரது தேவையைக் கேட்டு, அவற்றை எல்லாம் வாங்கி கொடுத்துவிட்டு, மெர்லின் பாட்டியை தனக்கு உதவும்படி கூறி, அவர் ஆங்கிலப் பாடம் எடுக்கும் வகையில் englishwithmerlin என்ற சமூக வலைத்தளப் பக்கத்தையும் துவங்கி, அதில் மெர்லின் பாட்டி ஆங்கிலம் சொல்லி கொடுக்கும் வீடியோவையும் பதிவிட்டார்.

அதன் பின் நிகழ்ந்ததுதான் மெர்லின் பாட்டியின் நம்பிக்கைக்கு கிடைத்த பலன். அவருடைய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிக அளவு பகிரப்பட்டது. அதனை அடுத்து அவர் சென்னையில் வசிக்கும்போது அவரிடம் பாடம் படித்த மாணவர்களுள் ஒருவர் அவரைத் தேடி வந்து, அவரைச் சந்தித்து அவருடனான நினைவுகளைப் பகிரும்போது மெர்லின் பாட்டியின் புன்னகை, பார்ப்போரின் மனதை உருகச் செய்தது.

அதன் பின் ஆதவற்ற மக்களுக்கு உதவும் "உறவுகள்" அறக்கட்டளையின் உதவியோடு, மெர்லின் பாட்டியை முதியோர் காப்பகத்தில் சேர்த்தனர். முகமது ஆசிக் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஆதரவின்றி இருக்கும் மக்கள், சாலையோர வியாபாரிகள், கையேந்தி யாசகம் கேட்டு வாழும் மக்கள், இளம் வயதில் சாதித்தவர்கள், சாதிக்க முனைப்போடு இருப்பவர்கள் என பலரின் கதைகளை வீடியோவாக பதிவிடுவார்.

குறிப்பாக, இவர் தூய்மைப் பணியாளர்களுக்கு பரிசுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் வழங்கும்போது அந்த மக்கள் முகமது ஆசிக்கை வாழ்த்துவது, உதவி செய்வது எவ்வளவு உன்னதமானது என்பதும், "அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்" எனும் அய்யன் வள்ளுவனின் சொல்லை நினைவூட்டும் வகையில் இருக்கும்.

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும் - திருவள்ளுவர் (குறள் 71)

இதையும் படிங்க: அவன் எங்கள் செல்ல மகன்: வீட்டில் யானை வளர்க்கும் கேரள தம்பதி!

Last Updated :Sep 15, 2023, 10:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.