ETV Bharat / state

பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை

author img

By

Published : Mar 8, 2023, 7:11 PM IST

இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் பாஐக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை!
பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை!

சென்னை: கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி அன்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சென்னையைச் சேர்த்த பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் கலந்து கொண்டார். அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய கல்யாணராமன், நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் அளித்த புகாரின் பேரில், கல்யாணராமன் மற்றும் மேட்டுப்பாளையம் காட்டூரைச் சேர்ந்த சதீஷ்குமார் ஆகிய இருவரும் அதே நாளில் கைது செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி இருவரும் கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். தொடர்ந்து இந்த மனுவை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், இருவருடைய ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அனுமதி அளிக்குமாறு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்தார். இதன் அடிப்படையில், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்படி அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து கல்யாணராமனின் மனைவி சாந்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரர் சாந்தி தரப்பில் குண்டர் சட்டத்திற்கு எதிராக அரசிடம் அளித்த மனு, உரிய நேரத்தில் பரீசிலிக்கப்படவில்லை என குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

இவ்வாறு கல்யாணராமன் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டாலும், இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாக பேசியதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் பதிவு செய்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று (மார்ச் 8) தீர்ப்பு வழங்கிய எழும்பூர் நீதித்துறை நடுவர் கூடுதல் நீதிமன்றம், கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரால் தொடர்ந்த அவதூறு வழக்கில் முதன் முறையாக தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் கைது செய்யப்பட்டதற்கு, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு அரசின் ஏவல் துறையாக தமிழ்நாடு காவல் துறை செயல்படுவதாக கடுமையாக தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: பாஜக பிரமுகர் மீதான குண்டர் சட்டம் ரத்து - சென்னை உயர்நீதிமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.