ETV Bharat / state

ராம்நாத் கோவிந்த் மகாபலிபுரம் விசிட்.. பாராட்டு பெற்ற சிறிது நேரத்தில் சுற்றுலா வழிகாட்டி மரணம்!

author img

By

Published : Jan 4, 2023, 12:30 PM IST

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மகாபலிபுரம் வந்த போது அவருக்கு சுற்றுலா வழிகாட்டியாக இருந்து அவரிடம் பாராட்டு பெற்ற நபர் சிறிது நேரத்திலேயே விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுலா வழிகாட்டி மரணம்
சுற்றுலா வழிகாட்டி மரணம்

செங்கல்பட்டு: முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஜனவரி 3-ம் தேதி, மகாபலிபுரம் வருகை தந்தார். அப்போது அவருக்கு இந்தி நன்கு பேசத் தெரிந்த வெண்புருஷம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (45) என்பவர் அவருக்கு சுற்றுலா வழிகாட்டியாக நியமிக்கப்பட்டார்.

மாமல்லபுரத்தில் பிரசித்தி பெற்ற இடங்களை முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பாலகிருஷ்ணன் உடனிருந்து விளக்கினார். மாமல்லபுரத்திலிருந்து விடைபெற்ற போது, பாலகிருஷ்ணனை ராம்நாத் கோவிந்த் தனிப்பட்ட முறையில் பாராட்டினார்.

குறிப்பாக பாலகிருஷ்ணனின் இந்தி மொழிப் புலமையையும், சரித்திர பின்னணிகளோடு பிரசித்திபெற்ற இடங்களை விளக்கி எடுத்துக் கூறியதையும் ராம்நாத் கோவிந்த் பாராட்டியுள்ளார். அந்த மகிழ்ச்சியில் இருந்த பாலகிருஷ்ணன் பணி முடிந்து தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டபோது ஐந்து ரதம் அருகே பாலகிருஷ்ணன் சென்ற இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் தலையில் அடிபட்டு சாலையில் கிடந்த அவரை, அவ்வழியே சென்றவர்கள் பார்த்து, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். முன்னாள் குடியரசுத் தலைவருக்கு மாமல்லபுரத்தை சுற்றிக் காட்டி நல்ல வழிகாட்டி என்று பாராட்டு பெற்ற பாலகிருஷ்ணன், அதே நாளிலேயே விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பெரம்பலூரில் பயங்கர விபத்து: இருவர் பலி; 25 பேர் படுகாயம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.