நடந்து முடிந்த மக்களவை மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தங்களுக்கு குக்கர் சின்னத்தை பொது சின்னமாக ஒதுக்கக் கோரி அமமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் அமமுக கோரிக்கையை நிராகரித்தனர். ஆனால், அமமுக-விற்கு ஏதாவது ஒரு பொதுச்சின்னத்தை வழங்க தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் பரிந்துரை செய்தனர்.
இதனையடுத்து அக்கட்சிக்கு பரிசு பெட்டகம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இந்நிலையில், தமிழ்நாட்டில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மே 19ஆம் தேதி இடைதேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பரிசு பெட்டகம் சின்னத்தை மீண்டும் ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் அமமுக தரப்பில் நேற்று முன்தினம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
இந்நிலையில், நடைபெறவிருக்கும் நான்கு தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பரிசு பெட்டகம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.