அரியலூர் மாவட்டம், தா பழூர் அருகே உள்ள கோவிந்தபுத்தூர் கிராமத்தில் வசித்து வரும் கிராம மக்கள் விவசாயத்தை முக்கியத் தொழிலாக செய்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக கள்ளச் சாராய விற்பனை அதிக அளவில் நடைபெற்று வந்தது. இதனைத் தடுக்கும் பொருட்டு அக்கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், பலரிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று கோவிந்தபுத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக இந்திரா என்பவர் பதவியேற்றார். தொடர்ந்து, ஊரில் இனி கள்ளச் சாராயம் விற்பனை செய்ய வேண்டாம் என அவர் எடுத்துரைத்து வந்தார்.
மேலும், மாவட்டக் காவல் துணை கண்காணிப்பாளர் மோகன்தாஸ் கள்ளச் சாராயம் விற்பனை செய்பவர்களை எச்சரித்து, இனி அவற்றை விற்பனை செய்ய மாட்டோம் என விற்பன்னர்களிடம் எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் வாங்கியுள்ளார். இதனை மீறி கள்ளச் சாராயம் விற்பனை செய்பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
ஊராட்சி மன்றத் தலைவர் இந்திரா பதவியேற்ற பின் மேற்கொள்ளப்படும் இந்த கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கைகளை கிராம மக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க : வெளி மாவட்டங்களில் இருந்து அரியலூர் வருபவர்களுக்கு தீவிர சோதனை