ETV Bharat / sports

No Ball Controversy: என்ன நடந்தது கடைசி ஓவரில்? அன்று தோனி - இன்று பந்த்!

author img

By

Published : Apr 23, 2022, 10:04 AM IST

களத்தில் இருந்த பேட்டர்கள் பாவெல், குல்தீப் இருவரையும் பெவிலியனுக்கு திரும்பும்படி கேப்டன் ரிஷப் பந்த் சைகை காட்டினார். ரிஷப் பந்தின் இந்த செயல் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவர் மீண்டும் மீண்டும் பேட்டர்களிடம் பெவிலியனுக்கு வருமாறு கூறினார்.

DC vs RR No Ball Controversy
DC vs RR No Ball Controversy

மும்பை: பரபரப்பாக நடைபெற்ற டெல்லி - ராஜஸ்தான் போட்டி கடைசி ஓவர் வரை வெற்றி யாருக்கு என தீர்மானமாகவில்லை. 19ஆவது ஓவர் மெய்டன் ஆன காரணத்தினால், கடைசி ஓவரில் 36 ரன்கள் தேவைப்பட்டது.பேட்டிங் ஸ்ட்ரைக்கில் பவர் ஹிட்டர் பாவெல் நின்றுகொண்டிருந்தார். மறுமுனையில் ஓபெட் மெக்காய் பந்துவீச தயாராக இருந்தார். இவ்விரண்டு கரீபியன் வீரர்கள் மீது ஒட்டுமொத்த கவனமும் குவிந்தது. பாவெல் போல்ட் வீசிய 18ஆவது ஓவரில் 2 சிக்சர்களை அடித்து நொறுக்கியிருந்தார்.

சர்ச்சையை கிளப்பிய புல்-டாஸ் பால்: மெக்காய் பந்துவீச்சை ஒரு கை பார்த்துவிட வேண்டும் என்ற துடிப்புடன் நின்ற பாவெல், நினைத்தபடியே வரிசையாக மூன்று சிக்சர்களை சிதறவிட்டார். அப்போது, புல்-டாஸாக வந்த பந்தை பாவெல் நோ-பால் கேட்டு முறையிட்டார். ஆனால், நடுவர்கள் அதற்கு நோ-பால் தர மறுத்தனர்.

பந்த்-ஐ கட்டுப்படுத்திய வாட்சன்: தொடர்ந்து, பெவிலியனில் இருந்த டெல்லி அணியினர் நடுவர்களை நோக்கி நோ-பால் கேட்டு கூச்சலிட்டனர். நடுவர்கள் தங்களது முடிவை மாற்றிக்கொள்ளாத நிலையில், களத்தில் இருந்த பேட்டர்கள் பாவெல், குல்தீப் இருவரையும் பெவிலியனுக்கு திரும்பும்படி கேப்டன் ரிஷப் பந்த் சைகை காட்டினார்.

ரிஷப் பந்தின் இந்த செயல் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவர் மீண்டும் மீண்டும் பேட்டர்களிடம் பெவிலியனுக்கு வருமாறு கூறினார். உடனடியாக, டெல்லி பேட்டிங் பயிற்சியாளரும், முன்னாள் ஆஸ்திரேலிய வீரருமான ஷேன் வாட்சன், கேப்டன் ரிஷப் பந்த்-ஐ அமைதிப்படுத்தி, பேட்டர்களை விளையாட்டை தொடரும்படி கூறினார்.

களத்திற்குள் நுழைந்த பயிற்சியாளர்: அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, பெவிலியனில் இருந்த டெல்லி அணி உதவி பயிற்சியாளர் பிரவின் ஆம்ரே களத்திற்குள் சென்று நடுவர்களிடம் முறையிட்டார். விதிகளை மீறி, பயிற்சியாளர் களத்திற்கு வந்து முறையிட்டதால், நடுவர்கள் அவரை பெவிலியனுக்கு திரும்பிப் போகும்படி கூறினர். அப்போது, டெல்லி பெவிலியனுக்கு அருகே பவுண்டரி லைனில் நின்றுகொண்டிருந்த பட்லருக்கும், டெல்லி கேப்டன் ரிஷப் பந்திற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

யார் மேல் தவறு?: இதனால், மைதானம் சற்றுநேரம் பரபரப்பாக காணப்பட்டது. மைதானம் மட்டுமின்றி இணையத்திலும் கருத்துகள் சூடுபறந்தது. ஆனால், இவ்வளவு சர்ச்சைக்கும் காரணமான நோ-பால் குறித்து, கள நடுவர்கள் மூன்றாவது நடுவரை அணுகவே இல்லை. விதிப்படி மூன்றாவது நடுவருக்கு போக வேண்டாம் என்றாலும், இத்தனை பெரிய சர்ச்சை ஏற்படும்போது நடுவர்கள் ரிவ்யூ செய்திருந்தால் சுழலை கட்டுப்படுத்தியிருக்கலாம் என்பது பல்வேறு தரப்பினரின் கருத்தாக இருந்தது. மற்றொரு தரப்பினர், கேப்டன் ரிஷப் பந்த், விதிமுறைகளை மதிக்காமல் செயல்பட்டதாக விமர்சனம் எழுந்தது.

'நான் செய்தது தவறுதான், ஆனால்...': அந்த போட்டியில் மீதம் இருந்த 3 பந்துகளில் வெறும் 2 ரன்களை மட்டுமே பாவெல் எடுக்க, ராஜஸ்தான் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தொடர்ந்து, நோ-பால் சர்ச்சை குறித்து பேசிய டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த், "நாங்கள் அந்த நோ-பால் முடிவை மறுபரிசீலனை செய்திருக்க வேண்டும், ஆனால், அது எனது கட்டுப்பாட்டில் இல்லை. அதுகுறித்து, ஒன்றும் செய்யமுடிவில்லையே என்று அதிருப்தி வந்தது. அது சந்தேகமே இன்றி, நோ-பால் தான். எனவே, தான் அனைவரும் மிகவும் விரக்தியடைந்தோம், மைதானத்தில் இருந்த அனைவரும் அதை பார்த்தனர்.

இதில், மூன்றாம் நடுவர் நிச்சயம் தலையிட்டு, நோ-பால் என அறிவித்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆனால், விதியை என்னால் மாற்ற முடியாது" என்று கூற, களத்திற்கு உதவி பயிற்சியாளரை அனுப்பிய செயல் சரியா என்று கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு,"அது தவறுதான். ஆனால், எங்களுக்கு நடந்ததும் தவறுதான்.

மிகவும் வருத்தம்: அந்த சூழலின் அழுத்தத்தில் அப்படி நடந்துவிட்டது, அதற்கு ஒன்றும் செய்ய முடியாது. இது எங்கள் இருவர் மீதும் உள்ள தவறுதான். ஏனென்றால், எங்கள் அணிக்கு என்றில்லை, இந்த தொடர் முழுவதும் நடுவர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். ஆட்டத்தில் நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும் என நினைக்கிறேன். எதிரணி 220 ரன்களை எடுத்தபோதும், அதை நெருங்கி வந்து தோல்வியடைவது என்பது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது" என்றார்.

பந்த் - தோனி: இதேபோன்று, 2020ஆம் ஆண்டில் இதே ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் கடைசி ஓவரில் நோ-பால் சர்ச்சை ஒன்று எழுந்தது. அப்போதைய சென்னை அணி கேப்டன் தோனி, பெவிலியனில் இருந்து களத்திற்கு வந்து நடுவர்களிடம் முறையிட்டதும் விமர்சனங்களையும், ஆதரவான கருத்துகளையும் பெற்றது. தோனி, பந்த் இருவரின் செயலும் ஊக்குவிக்க வேண்டியதில்லை என்றாலும், தற்போதைய டி20 கிரிக்கெட் சூழலில் நடுவர்கள் தங்களது முடிவில் விடாப்பிடியாக இருப்பது என்பதும் ஏற்கத்தக்கது அல்ல என்பதே பலரின் கருத்தாக உள்ளது.

இதையும் படிங்க: DC vs RR: அனல் பறந்த போட்டியில் ராஜஸ்தான் வெற்றி - பட்லர் சதம்; பாவம் பாவெல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.