ETV Bharat / sports

சாம்பியன்களை போல செயல்பட்டோம்: ராகுல் டிராவிட்

author img

By

Published : Jul 21, 2021, 6:26 PM IST

இலங்கை அணி அற்புதமாக விளையாடினாலும், நாம் சாம்பியன்கள் போன்று செயல்பட்டு அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளோம் என நேற்றைய (ஜூலை 20) வெற்றி குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

ராகுல் டிராவிட்
ராகுல் டிராவிட்

கொழும்பு (இலங்கை): இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தற்போது ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. குறிப்பாக, நேற்று (ஜூலை 20) நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினாலும், கடைசிகட்ட பேட்ஸ்மேன்கள் இந்திய அணியை கரையேற்றினர்.

இந்திய அணியில் அதிகபட்சமாக தீபக் சஹார் 69 ரன்கள் குவித்து, 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார். இப்போட்டிக்கு பின் இந்திய அணியின் உடை மாற்றும் அறையில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வீரர்களிடம் பேசிய காணொலியை பிசிசிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

கவலை வேண்டாம்

அந்த காணொலியில், "இந்த போட்டியில் நாம் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. வெற்றி பெறாவிட்டாலும் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், கடுமையாக விளையாடுவதுதான் முக்கியம். அவர்கள் (இலங்கை) நமக்கெதிராக சிறப்பாக விளையாடினாலும், நாம் சாம்பியன்களைப் போன்று செயல்பட்டு ஆட்டத்தை வென்றுள்ளோம்.

தனிநபர் ஆட்டத்தை குறிப்பிட்டு பேச இந்த நேரமில்லை என்றாலும், இறுதிகட்டத்தில் ஒரு தனிநபர்களின் ஆட்டம்தான் வெற்றியை பெற்றுத் தந்திருக்கிறது. பேட்டிங், பந்துவீச்சு என அனைத்து பிரிவிலும் சிறப்பான ஆட்டத்தை காண முடிந்தது" என பேசியிருந்தார்.

இந்த காணொலியில், சூர்யகுமார் யாதவ், புவனேஷ்வர் குமார், தீபக் சஹார் ஆகியோரும் நேற்றைய போட்டி குறித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டனர்.

இதையும் படிங்க: IND vs SL: இலங்கையை கதறவிட்ட தீபக் சஹார்; மீண்டும் தொடரை இழந்தது இலங்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.