ETV Bharat / sports

இந்த டைம் மிஸ் ஆச்சுனா.. ரவி சாஸ்திரியின் கணிப்பு என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 12, 2023, 4:38 PM IST

Ravi Shastri about ICC Cricket world cup 2023: இந்த முறை இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்ற முடியாத பட்சத்தில், அடுத்த மூன்று உலகக் கோப்பை தொடர் வரை காத்திருக்க வேண்டும் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: கடந்த அக்டோபர் 5 அன்று தொடங்கிய உலகக் கோப்பை 2023 தொடர், பாதி நிலையைத் தாண்டி விறுவிறுப்பை அடைந்துள்ளது. அதிலும், இந்திய அணி இதுவரை விளையாடிய 8 லீக் ஆட்டங்களிலும் அபாரமான வெற்றியை மட்டுமே அடைந்துள்ளது. மேலும், இன்றைய கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியுடன் மோதி வருகிறது. இதுவரை 16 புள்ளிகள் பெற்று, +2.456 ரன் ரேட் உடன் ஆடி வரும் இந்திய அணி, வருகிற 15ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியுடன் மோத உள்ளது.

இந்த நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி, இந்திய அணியின் உலகக் கோப்பை வெல்லும் வாய்ப்பு குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய ரவி சாஸ்திரி, “இந்த நாடு ஒரு மிகுந்த மகிழ்ச்சியில் திளைக்க உள்ளது. நாம் இறுதியாக உலகக் கோப்பையை வென்று 12 ஆண்டுகள் ஆகிறது. எனவே, மீண்டும் அந்த கோப்பையைக் கைப்பற்ற வாய்ப்பு இருக்கிறது. தற்போதைய விளையாட்டின் நிலைமை, கோப்பையைக் கைப்பற்றுவதற்கான சிறந்த வாய்ப்பைத் தர உள்ளது.

அதேநேரம், ஒருவேளை இந்த முறை உலகக் கோப்பையைக் கைப்பற்ற முடியாமல் போனால், அடுத்த மூன்று உலகக் கோப்பை தொடர் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது. தற்போதைய அணியில் 7 முதல் 8 வீரர்கள் உச்சத்தில் உள்ளனர். வீரர்களுக்குத் தேவையான வழிமுறைகளைக் கொடுத்து ஆடினால், இந்திய அணி வெற்றி பெறும். இது ஒரு அசாத்தியமானது மற்றும் அதற்கு சில காலங்கள் தேவை. அனைத்தும் ஒரே இரவில் நிகழ்ந்து விடவில்லை.

இந்திய அணி மற்ற அணி வீரர்களை, கடந்த நான்கைந்து வருடங்களாக எதிர்கொண்டு வருகின்றனர். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு சிராஜ் அணியில் இணைந்தார். அவர்கள் ஒவ்வொருவருக்கும் எது முக்கியமான இடம் என்பது தெரியும். இந்த உலகக் கோப்பை தொடரில் ஷார்ட் பால்களைக் கையாள்வதில் சிறந்த திறனை வெளிப்படுத்தி உள்ளனர். 90 சதவீதம், அவர்கள் ஸ்டெம்பில் மட்டுமே தங்களது இலக்கை வைக்கின்றனர்” என தெரிவித்தார்.

மேலும், கடந்த 1983ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலும், 2011ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையிலும் இந்தியா, உலகக் கோப்பையைக் கைப்பற்றி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 50வது சதம் விளாசி சாதனை படைப்பாரா கிங் கோலி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.