சென்னை வடபழனியில் உள்ள தென்னிந்திய திரைப்பட சங்கத்தில் அச்சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அதில், "பெப்சியில் திரைப்பட தொழிலாளர்களுக்காக பகுதிநேரமாக இயங்கி வந்த மருந்தகம் நேற்று (ஆக.28) முதல் முழு நேர மருந்தகமாக இயங்கி வருகிறது. இதற்கு அங்கீகாரம் வழங்கிய மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி ஆணையராக இருக்கக்கூடிய பி.எல்.ராஜேந்திரன் முயற்சியால் எங்களுடைய கனவு நிறைவேறியுள்ளது.
திரைப்பட தொழிலாளர்களுக்கு சிவக்குமார், கார்த்திக், சூர்யா ஆகியோர் 80 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளனர். ஏற்கனவே எங்களது வேண்டுகோளை ஏற்று 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கியதை மறக்க முடியாது. இந்த ஆறு மாதத்தில் திரைப்படத் தொழிலாளர்களுக்கு 5 கோடி ரூபாய் வரை நிதி சேர்ந்துள்ளது. இந்த 5 கோடி ரூபாயில் அனைத்து தொழிலாளர்களுக்கும் உணவுப்பொருள்கள் பிரித்து வழங்கப்பட்டன.
பசி கொடுமையினால் மரணம் இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது. பெப்சிக்கு நிதியுதவி அளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். திரைப்பட படப்பிடிப்பு நின்றதால் பெப்சி தொழிலாளர்களுக்கு 600 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இயக்குநர், நடிகர்கள் என்ற வகையில் 400 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளனர். மொத்தமாக ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு உரிய அனுமதியுடன் படப்பிடிப்பு நடத்த அனுமதியளித்தால் நன்றாக இருக்கும். கடந்த ஆறு மாத காலமாக தினசரி படப்பிடிப்பிற்கு செல்லும் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மிகவும் மோசமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். ஆகவே, அரசு எங்கள் கோரிக்கையை ஏற்று படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்க வேண்டும்" என கோரிக்கை வைத்தார்.
இதையும் படிங்க: கொசுவலை உற்பத்தி செய்ய மூலப்பொருள் இருக்கு ஆனா, ஆட்கள் இல்லை!