ETV Bharat / sitara

சூரி அளித்த பண மோசடி புகாரில் உத்தரவு; விஷ்ணு விஷால் தரப்பு அதிர்ச்சி

author img

By

Published : Feb 5, 2022, 10:28 AM IST

சூரி அளித்த பண மோசடி புகார்; மத்திய குற்ற பிரிவுக்கு மாற்றம்!
சூரி அளித்த பண மோசடி புகார்; மத்திய குற்ற பிரிவுக்கு மாற்றம்!

விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா மீது சூரி அளித்த பண மோசடி புகாரில், வழக்கின் விசாரணையை சென்னை மத்திய குற்றபிரிவுக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்றம், விசாரணையை ஆறு மாதங்களுக்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளது. இதனால் விஷ்ணு விஷால் தரப்பு அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

சென்னையை அடுத்த சிறுசேரியில் நிலம் வாங்கி தருவதாக கூறி, விஷ்ணு விஷாலின் தந்தையான முன்னாள் காவல்துறை அலுவலர் ரமேஷ் குடவாலா, தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் ஆகியோர் தன்னிடத்தில் பணமோசடி செய்ததாக சூரி காவல்நிலையத்தில் புகாரளித்திருந்தார்.

இந்தப் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி சூரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு இன்று (பிப்.4) விசாரணைக்கு வந்தது. அப்போது சூரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ரமேஷ் குடவாலா முன்னாள் காவல்துறை தலைவர் என்பதால் விசாரணை நடத்தும் அலுவலர்கள் அவருக்கு சாதகமாக செயல்படுவதாக தெரிவித்தார்.

இதையடுத்து இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, கோடிக்கணக்கில் பண மோசடி நடைபெற்றுள்ளதால் வழக்கின் விசாரணையை, மத்திய குற்ற பிரிவு காவல்துறைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

வழக்கை துணை ஆணையர் பொறுப்பில் உள்ள ஐபிஎஸ் அலுவலர் விசாரணை நடத்த வேண்டும் எனவும், இதனை கூடுதல் ஆணையர் பொறுப்பில் உள்ள அலுவலர் மேற்பார்வையிடவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் புதிதாக விசாரணை நடத்தி, அதனை ஆறு மாதங்களுக்குள் முடித்து அறிக்கை தாக்கல் செய்யவும் அவர் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார். இதனால் விஷ்ணு விஷால் தரப்பு அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

இதையும் படிங்க: நிரூப்புடன் எப்போது திருமணம்?; ரசிகருக்கு பதிலளித்த யாஷிகா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.