ETV Bharat / sitara

ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைத்த சூர்யா - முணுமுணுக்கும் கோடம்பாக்கம்

author img

By

Published : Aug 8, 2021, 4:54 PM IST

சூர்யா தனது தயாரிப்பில் அடுத்தடுத்து நான்கு படங்களை ஓடிடி தளத்திற்கு விற்பனை செய்தது திரையுலகினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Reason behind suryas regular ott release
Reason behind suryas regular ott release

சென்னை: திரையரங்குகளுக்கு சென்று சினிமா பார்ப்பது ஒரு கொண்டாட்ட மனநிலை. பண்டிகை காலம் வந்தாலே புதுப்படங்களை திரையரங்குகளில் சென்று பார்த்துவிட்டு திரும்பாமல் பண்டிகை முற்றுப்பெறாது. ஆனால், காலப்போக்கில் எல்லாம் மாறியது. அதுவும் இந்த கரோனா வந்ததும் திரையுலகில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது.

ஓடிடி தளங்கள் ஒவ்வொன்றாக வர ஆரம்பித்தன. வீட்டில் இருந்தே திரைப்படங்களை பார்க்கும் வசதி வந்தது. திரையரங்குகளும் மாதக்கணக்கில் மூடப்பட்டதால் ஊரடங்கு காலத்தில் வீட்டில் முடங்கிய மக்களுக்கு ஓடிடி தளங்களே ஆறுதலாய் இருந்தன. அதனை பயன்படுத்திக்கொண்ட திரை வணிகம், அடுத்தடுத்து ஓடிடி தளங்களை உருவாக்கிக்கொண்டு விஸ்வரூபம் எடுத்தது.

இவை எல்லாவற்றிற்கும் தமிழ் சினிமாவில் அடித்தளமிட்டவர் சூர்யா, தனது மனைவி ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படத்தை ஓடிடி தளத்திற்கு விற்பனை செய்தார். இதனால் அதிர்ச்சியடைந்த திரையரங்கு உரிமையாளர்கள், சூர்யா மீது கோபத்தில் இருந்தனர். அப்படியே ஒரு சில படங்கள் ஓடிடியில் வெளியானாலும் அவை சிறிய படங்களே. மீண்டும் சூர்யா தனது அதிரடியை ஆரம்பித்தார்.அவரது சூரரைப் போற்று திரைப்படத்தை அமேசான் தளத்தில் வெளியிட்டார். முதல்முறையாக ஒரு முன்னணி நடிகரின் திரைப்படம் திரையரங்கு தவிர்த்து ஓடிடி வசம் சென்றது.

திரையரங்கு உரிமையாளர்களோ இனி சூர்யா குடும்பத்து படங்களை எங்களது திரையரங்குகளில் திரையிடமாட்டோம் என்றார்கள். ஆனால், கார்த்தியின் சுல்தான் திரையரங்குகளில் வெளியானது வேறு கதை. தற்போது கரோனா இரண்டாவது அலை காரணமாக தமிழ்நாட்டில் திரையரங்குகள் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேல் மூடப்பட்டுள்ளன. இந்த இடைப்பட்ட காலங்களில் ஓடிடி தளங்கள் அசுர வளர்ச்சி அடைந்துள்ளன. தற்போது நடிகர் சூர்யா செய்துள்ள காரியம் மீண்டும் திரையரங்கு உரிமையாளர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடன்பிறப்பே
உடன்பிறப்பே

சூர்யா தனது 2 டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்த நான்கு படங்களை அமேசான் தளத்திற்கு விற்பனை செய்துள்ளார். இதுதான் தற்போது பிரச்னையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. சினிமாவில் தந்தை காலத்தில் இருந்து திரையரங்குகள் மூலம் புகழ்பெற்ற குடும்பம் தற்போது திரையரங்குகளை கண்டுகொள்ளவில்லை என்றும், ஏற்றிவிட்ட ஏணியை சூர்யா எட்டி உதைத்துவிட்டார் என்றும் முணுமுணுக்கிறது கோடம்பாக்கம்.

இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், தற்போது எங்களின் ஒரே நோக்கம் திரையரங்குகளை திறப்பதுதான். அதற்காக தமிழ்நாடு அரசிடம் பேசி வருகிறோம். தற்போதைய சூழலில் கருத்து கூற விரும்பவில்லை. முதல் குறிக்கோள் திரையரங்குகளை திறப்பதுதான்.

திருப்பூர் சுப்பிரமணியம்
திருப்பூர் சுப்பிரமணியம்
இதுகுறித்து எதிர்ப்பு தெரிவிக்க தேவையில்லை. அது பிரயோஜனமற்றது. திரையரங்குகள் திறந்து நன்றாக தொழில் நடக்க வேண்டும் என்று முடித்துக்கொண்டார்.

என்னதான் தற்போது ஓடிடி தளங்கள் வளர்ச்சியடைந்தாலும், திரையரங்குகள் தான் திரையுலகினருக்கு முதல் கோவில் என்பதை மறுக்க முடியாது. அதை திரைத்துறை சார்ந்தவர்கள் உணர வேண்டும்.

இதையும் படிங்க: மீண்டும் தானா சேரும் கூட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.