சென்னை: தயாரிப்பாளரும் இயக்குநருமான சிவி குமார் மற்றும் ஜென் ஸ்டூடியோஸ் சுரேந்திரன் ரவி இணைந்து தயாரித்துள்ள படம் ஜாங்கோ. இந்தியாவின் முதல் டைம்லூப் திரைப்படமான இதை மனோ கார்த்திகேயன் இயக்கியுள்ளார். இதற்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.
இப்படத்தில் அறிமுக நாயகன் சதீஷ்குமார், மிருணாளினி, கருணாகரன், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர் நடிகையர் மற்றும் பல்வேறு திரை பிரபலங்கள் கலந்துகொண்டு பேசினர்.
இயக்குநர் வேலு பிரபாகரன்
தமிழ் சினிமாவை அடுத்த காலகட்டத்திற்கு நகர்த்தியவர் சிவிகுமார். கோடிகோடியாய் நடிகர்கள் சம்பளம் வாங்குவது அயோக்கியத்தனம். அரசியல்வாதிகளை பார்த்து நடிகர்களுக்கும் ஆசை வந்துவிட்டது என்று தெரிவித்தார்.
இயக்குநர் கல்யாண்
திரையரங்குகள் சினிமாவின் தாய்வீடு. ஓடிடி சித்தி வீடு என்றார். குறும்பட இயக்குநர்களுக்கு நம்பிக்கையாக சிவி.குமார் இருக்கிறார் என்று தெரிவித்தார்.
இயக்குநர் ரவிக்குமார்
படம் நன்றாக வந்துள்ளது. மிகச் சிறந்த இயக்குநர்களை உருவாக்கியவர் சிவி.குமார். படம் நிச்சயம் வெற்றிபெறும் என்றார்.
இயக்குநர் மனோ கார்த்திகேயன்
படத்தில் விஎப்எக்ஸ் சிறப்பாக வந்துள்ளது. அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களது பணியை சிறப்பாக செய்துள்ளனர். இந்தியாவிலேயே முதல் டைம் லூப் திரைப்படம் ஜாங்கோ. இதனை தயாரிப்பாளர் சிவி.குமார் புரிந்துகொண்டார். நடிகர்களின் நடிப்பும் இந்த படத்தை மற்ற படங்களில் இருந்து வேறுபடுத்திக்காட்டியுள்ளது என்றார்.
இசையமைப்பாளர் ஜிப்ரான்
இப்படத்திற்கு திரைக்கதை சரியாக இல்லாமல் இருந்தால் யாருக்கும் புரியாது. ஆனால் தெளிவாக புரியும்படி இயக்குநர் உழைத்துள்ளார் பாடல்கள் நன்றாக வந்துள்ளது என்றார்.
நடிகை மிருணாளினி
இது ஒரு வித்தியாசமான நல்ல படம். அருமையான கேரக்டர் எனக்கு கிடைத்துள்ளது. ஜிப்ரான் பாடலுக்கு டிக்டாக் பண்ணியிருந்தேன். இப்போது அவர் எனக்காக பாடல் கொடுத்துள்ளார் என்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
நடிகர் சதீஷ்குமார்
சிவி.குமார் என்மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கினார். படப்பிடிப்பு தளத்தில் ஒரே குழப்பமாக இருக்கும். ஒரே காட்சி மீண்டும் மீண்டும் எடுக்கப்படும். இப்படத்தை திரையரங்குகளில் பார்த்தால் சிறப்பான அனுபவமாக இருக்கும் என்றார்.
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா
இன்று தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி இயக்குநர்களை அறிமுகப்படுத்தியவர் சிவிகுமார். ஜாங்கோ சிறப்பான வெற்றியை பெறும். ஜிப்ரானுடன் இந்த ஆண்டு நிச்சயம் பணியாற்றும் வாய்ப்பு அமையும் என்று நம்புகிறேன். திருப்பூர் பனியன் தயாரிக்கும் ஊர் என்றால், தற்போது இயக்குநர்களை தயாரித்து அனுப்புகிறது என்றார்.
தயாரிப்பாளர் சிவிகுமார்
முதலில் இந்த கதையின் மீது நம்பிக்கை இல்லை. இயக்குநர் கார்த்தி ஒரு கடுமையான உழைப்பாளி. அவரது உழைப்பிற்கு படம் நன்றாக வந்துள்ளது. விரைவில் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்றார்.
இதையும் படிங்க: தாராள பிரபு நாயகி தான்யா ஹோப்பின் தாராள குணம்!