ETV Bharat / jagte-raho

இறந்தவரின் சடலத்தை பாதுகாத்த மனைவி - காவல்துறையினர் மீட்டு விசாரணை

author img

By

Published : Nov 22, 2020, 6:48 PM IST

செங்கல்பட்டு: இறந்தவர் உடலை வீட்டில் வைத்து பாதுகாத்து வந்த நிலையில், துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் சடலத்தை மீட்ட செங்கல்பட்டு காவலர்கள், அது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்தவரின் சடலம்
இறந்தவரின் சடலம்

செங்கல்பட்டு மாவட்டம் பெரிய புத்தூர் கிராமம் அருகே நீஞ்சிலி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தாமோதரன் (62). இவர் ஜாதகம் கணிப்பது, பஞ்சாங்கம் பார்ப்பது போன்ற தொழில் செய்து வந்தார். இவரது மனைவி இறந்துவிட்டதால், திருச்சியைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கடந்த ஆறு ஆண்டுகளாக வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், தாமோதரன் எங்கே என்று அக்கம் பக்கத்தினர் விசாரித்தபோது, அவர் ஊருக்கு சென்றிருப்பதாக ராஜேஸ்வரி கூறிவந்தார். இதனிடையே, அந்த பகுதி முழுவதும் நேற்று (நவம்பர் 21) துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், தாமோதரன் வீட்டுக்குள் நுழைய முயன்றனர். அவர்களை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் ராஜேஸ்வரி தாக்கினார்.

இதனால், ராஜேஸ்வரியை தள்ளிவிட்டு சிலர் உள்ளே சென்று பார்த்தபோது, அழுகிய நிலையில் தாமோதரனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. உடனே, தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த செங்கல்பட்டு காவல்துறையினர், தாமோதரனின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.