ETV Bharat / jagte-raho

சௌகார்பேட்டை கொலை சம்பவம்: புனேவுக்கு பறந்த தனிப்படை காவல் துறை!

author img

By

Published : Nov 12, 2020, 1:17 PM IST

சௌகார்பேட்டையில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஒரு தனிப்படை காவல் துறையினர் புனே சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சவுகார்பேட்டை கொலை
சவுகார்பேட்டை கொலை

சென்னை: சௌகார்பேட்டை விநாயக மேஸ்திரி தெருவில் உள்ள குடியிருப்பில் தலில் சந்த் ஜெயின், புஷ்பா பாய் இவர்களது மகன் சீத்தல் ஜெயின் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தனிப்படை காவல் துறையினர் புனே சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

தலில் சந்த் ஜெயினின் மகள் பிங்கி நேற்று(நவ.11) இரவு சௌகார்பேட்டை வீட்டிற்கு வந்து பார்த்தபொழுது மூவரும் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்த நிலையில் கிடந்ததைக்கண்டு காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கொலை நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தார்.

சவுகார்பேட்டை கொலை

இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சீத்தல் ஜெயின் அவரது மனைவி ஜெயமாலா உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பெற்றோருடன் வசித்து வருகிறார். ஜெயமாலா இரு பெண் குழந்தைகளுடன் புனேவில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வரும் நிலையில், ஜீவனாம்ச வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி ஜெயமாலா மற்றும் அவரது உறவினர்கள், சீத்தல் ஜெயின் மற்றும் அவரது பெற்றோரை தாக்கியதாக யானைக்கவுனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இரு குடும்பத்தினரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் மூவரும் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஜெயமாலாவிடம் விசாரணை செய்ய தனிப்படை விரைந்துள்ளது. சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய காவல் துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று(நவ.11) மாலை ஐந்து பேர் தலில் சந்த் வீட்டிற்கு வந்து சென்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன் அடிப்படையில் ஜெயமாலா மற்றும் அவரது உறவினர்கள் இந்தக் கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதையும் படிங்க: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சுட்டுக் கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.