ETV Bharat / international

'தமிழர்கள் மொழிக்காக போராடுபவர்கள்' - அமெரிக்காவில் தலைமை நீதிபதி பேச்சு

author img

By

Published : Jun 25, 2022, 2:24 PM IST

Updated : Jun 25, 2022, 3:56 PM IST

தமிழர்கள் அவர்களின் மொழிக்கும், கலாசாரத்திற்கும் காக்க ஒற்றுமையாக போராடுவார்கள் என்றும் அவர்களை போன்று நாம் இருக்க வேண்டும் என்றும் அமெரிக்காவில் நடைபெற்ற தெலுங்கு சங்க நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

CJI Ramana in TANA Event at Virginia
CJI Ramana in TANA Event at Virginia

வர்ஜினீயா (அமெரிக்கா): இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா அமெரிக்காவில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு நியூயார்க் விமான நிலையத்தில் நேற்று முன்தினம் (ஜூன் 23) சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வடக்கு அமெரிக்கவின் தெலுங்கு சங்கம் (TANA) ஏற்பாடு செய்த நிகழ்வு வர்ஜினீயாவில் இன்று (ஜூன் 25) நடைபெற்றது. அதில், தலைமை நீதிபதி என்வி ரமணா பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "தெலுங்கு மக்களை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. அமெரிக்காவில் 7 லட்சம் தெலுங்கு பேசும் மக்கள் வசிக்கின்றனர். இந்திய கலாசாரத்திற்கும், சடங்குகளுக்கும் நீங்கள் கொடுக்க முக்கியத்துவத்தை பார்க்கும்போது, தெலுங்கு தேசத்தின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கிறது என்ற நிறைவு ஏற்படுகிறது.

வீட்டில் தெலுங்கு பேசுங்கள்: நமது தாய் மண்ணை எப்போதும் மறக்கக் கூடாது, எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். தெலுங்கு வெறும் மொழி மட்டுமல்ல, அது நமது வாழ்க்கை முறை. அந்நிய மொழிகளை மதிக்க வேண்டும். அதேபோல், உங்களது வீட்டில் தெலுங்கு மொழியிலே பேச வேண்டும்.

நான் தெலுங்கில்தான் படித்தேன்: நாம் தெலுங்கு மொழிக்காக போராட வேண்டிய சூழலில் இருப்பது பெரும் வேதனையை அளிக்கிறது. தாய்மொழியில் படித்தால் வேலை கிடைக்காது என்பது கட்டுக்கதை. நான் தெலுங்கில் படித்தே இந்த நிலைக்கு வந்துள்ளேன். 2010-2017 ஆண்டுகளில் அமெரிக்காவில் தெலுங்கு பேசும் மக்களின் எண்ணிக்கை 85 விழுக்காடு அதிகரித்துள்ளது. இவர்கள் தனது தாய்மண்ணிற்கும் பல்வேறு உதவிகளையும் செய்து வருகின்றனர்.

ஏற்றத்தாழ்வுகளை ஏற்காதீர்கள்: அமெரிக்காவில் குடிபெயர்ந்தவுடன் பொருளாதாரத்தில் வலுபெற்று இருப்பீர்கள். எனவே, சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதில் நீங்கள் பெரும் பங்காற்ற வேண்டும். எவ்வளவு பணம் சம்பாதித்தாலும், சமூகத்தில் அரஜாகப்போக்கு நிலவினால் உங்களால் நிம்மதியாக வாழ முடியாது.

தமிழர்கள் போல் இருப்போம்: இந்த சமூகத்தில் பல மொழி பேசுபவர்களும், பல இடங்களில் இருந்து குடிபெயர்ந்தவர்களும் இருப்பார்கள். அதனால், நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து மரியாதையுடன் வாழ வேண்டும். தமிழர்கள் அவர்களின் மொழிக்கும், கலாசாரத்தையும் காக்க ஒற்றுமையாக போராடுவார்கள். அவர்களை போன்று நாம் இருக்க வேண்டும்.

அனைவரும் சமம்: ஒரு தெலுங்கர் தலைமை நீதிபதியாக முடியும் என்பதை நினைக்கையில் பெருமையாக உள்ளது. நான் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தேன். எனது குடும்பத்தில் யாரும் உயர்கல்வி படித்தது கிடையாது. நீதித்துறையில் இந்தளவு உயரத்திற்கு வர மிகவும் கடினமாக இருந்தது. நான் ஜனாதிபதியை பார்த்தாலும் சரி, சிறு பணியாளரை பார்த்தாலும் சரி இருவரிடமும் சரிசமமாகவே நடந்துகொள்வேன். எனது நடத்தையில் எந்த மாற்றமும் இருக்காது.

மக்களுக்கு நீதிக்கிடைக்க நீதித்துறை விரைவாக செயல்பட வேண்டும். சட்டத்தை மறுஆய்வு செய்யும் அதிகாரம் இந்திய நீதித்துறைக்கு உள்ளது. ஒருவர் நீதிபதியாக பொறுப்பேற்றால், அரசியல் கருத்துக்களைப் பொருட்படுத்தாமல் செயல்பட்டு நீதியை நிலைநாட்ட வேண்டும். நீதித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பணியை விரைந்து முடித்து வருகிறோம். சுப்ரீம் கோர்ட்டில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதில் கூட தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்" என்றார்.

இந்நிகழ்வில், பாரத் பயோடெக் தலைவர் கிருஷ்ணா எல்லா, எம்.டி.சுசித்ரா எல்லா, இந்திய தூதரக ஜெனரல் ரந்தீர் ஜெய்ஷ்வால், தெலுங்கு சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் ஜெய் தல்லூரி, சங்கத்தின் பிரமுகர்களான வலிவெட்டி பிரம்மாஜி, வசிரெட்டி வம்சி, அரவிந்த் ஆகியோர் அவரை வரவேற்றனர்.

இதையும் படிங்க: அமெரிக்காவில் தெலுங்கு சங்க நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி என்.வி. ரமணா பங்கேற்பு

Last Updated :Jun 25, 2022, 3:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.