ETV Bharat / international

இலங்கையில் 9 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!

author img

By

Published : May 20, 2022, 7:28 PM IST

இலங்கையில் நீடித்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அதிபர் கோத்தபய ராஜபக்ச முன்னிலையில் ஒன்பது புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.

இலங்கையில் 9 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
இலங்கையில் 9 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

கொழும்பு: இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களின் போராட்டத்தையடுத்து, பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச அண்மையில் பதவி விலகினார். அதிபர் கோத்தபய ராஜபக்சவும் பதவி விலக வேண்டும் என மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கையில் அரசியல் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிபர் கோத்தபய, ரணில் விக்கிரமசிங்கேவை புதிய பிரதமராக அறிவித்ததையடுத்து, கடந்த வாரம் அவர் பதவியேற்றார். இதையடுத்து ஒன்பது புதிய அமைச்சர்கள் இன்று (மே 20) பதவி ஏற்றனர். அதிபர் மாளிகையில் அதிபர் கோத்தபய ராஜபக்ச முன்னிலையில் ஒன்பது அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். அதிபர், பிரதமர் உள்பட 25 பேர் அமைச்சரவையில் இடம்பெறுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அமைச்சர்களிலும் நிதியமைச்சர் யாரும் நியமிக்கப்படவில்லை.

புதிய அமைச்சர்களில் எதிர்க்கட்சியான சஜித் பிரேமதாஸவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த இரண்டு பேர் பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் 9 புதிய அமைச்சர்களும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளும்:

1. நிமல் சிறிபால டி சில்வா - துறைமுகங்கள், விமான சேவைகள், கடற்படை அமைச்சர்

2. சுசில் பிரேமஜயந்த - கல்வித்துறை அமைச்சர்

3. கெஹலிய ரம்புக்வெல்ல - சுகாதாரத்துறை அமைச்சர்

4. விஜயதாச ராஜபக்ச - நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் அமைச்சர்

5. ஹரின் பெர்னாண்டோ - சுற்றுலாத்துறை அமைச்சர்

6. ரமேஷ் பத்திரனா - தோட்டக்கலைத்துறை அமைச்சர்

7. மனுஷா நாணயக்காரா - தொழில், வேலைவாய்ப்புத்துறை அமைச்சர்

8. நளின் பெர்னாண்டோ - வர்த்தகம், உணவுப்பாதுகாப்புத்துறை அமைச்சர்

9. டிரான் அலஸ் - பொதுமக்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர்

இதில், ஹரின் பெர்னாண்டோ, நாணயக்காரா எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்தவர்கள் ஆவர். இது குறித்து அக்கட்சி கூறுகையில், ’அமைச்சர் பதவி பெற்ற இருவர் மீதும் கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இலங்கைக்கு அத்தியாவசிய பொருள்கள் அனுப்பப்பட்டன!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.