இலங்கையில் கடந்த சனிக்கிழமை (16ஆம் தேதி) அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இதில், பொது ஜன பெரமுனா கட்சி வேட்பாளராக போட்டியிட்ட இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் இளைய சகோதரரான கோத்தபய ராஜபக்ச 52 விழுக்காடுகளுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி கண்டுள்ளார்.
இதனையடுத்து, இன்று காலை 11 மணி அளவில் இலங்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜயன்தா ஜயசூர்யா முன்னிலையில் கோத்தபய ராஜபக்ச அந்நாட்டு 8ஆவது அதிபராக பதவியேற்றுக்கொண்டார்.
ஊழல், பொருளாதார நெருக்கடி, ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் ஆகியவை கோத்தபய ராஜபக்சவின் வெற்றிக்கு உதவியாக அமைந்திருக்கும் எனக் கருதப்படுகிறது.
ஈழப் போரின் போது மகிந்த ராஜபக்ச தலைமையில் பாதுகாப்புச் செயலராக செயல்பட்ட, கோத்தபய ராஜபக்ச ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமானவர் என்று பல்வேறு தரப்பினரால் அறியப்படுகிறார். சொந்த குடும்பமே இவரை 'டெர்மினேட்டர்' என அழைப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மீண்டும் இலங்கை பிரதமர் ஆவாரா மகிந்த ராஜபக்ச?