ETV Bharat / international

இடம் இல்லை... பிரதமரை வெளியேற்றிய உணவகம்

author img

By

Published : May 19, 2020, 2:02 PM IST

Updated : May 19, 2020, 2:08 PM IST

வெலிங்டன்: காலை சிற்றுண்டிக்காக உணவகத்திற்குச் சென்ற நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னை இடம் இல்லாத காரணத்தினால் உணவக ஊழியர்கள் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

Jacinda Ardern
Jacinda Ardern

கோவிட்-19 தொற்று காரணமாக முன்னதாகவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாடுகளில் ஒன்று நியூசிலாந்து. அந்நாட்டுப் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் எடுத்த முக்கிய நடவடிக்கைகள் காரணமாக நியூசிலாந்து கரோனா பரவல் பெரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை.

வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து, நியூசிலாந்தில் அமல்படுத்தப்பட்ட எச்சரிக்கை நான்காம் நிலையிலிருந்து மூன்றாம் நிலைக்குக் குறைக்கப்படுவதாகவும் உணவகங்களும், கடைகளும் ஐம்பது விழுக்காடு இருக்கைகளுடன் செயல்படத் தொடங்கலாம் என்றும் ஜெசிந்தா கடந்த வாரம் அறிவித்தார்.

இந்நிலையில், நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனிலுள்ள ஒரு பிரபல உணவகத்திற்குக் காலை சிற்றுண்டிக்காக ஜெசிந்தா ஆர்டெர்ன், தனது வருங்கால கணவர் கிளார்க் கேஃபோர்ட் மற்றும் நண்பர்களுடன் சென்றுள்ளார். அந்த உணவகத்திலிருந்த 50 விழுக்காடு இருக்கைகளும் நிரம்பியிருந்ததால், பிரதமரையும் அவரது நண்பர்களையும் உள்ளே அனுமதிக்க ஊழியர்கள் மறுத்துவிட்டனர்.

உணவகத்தில் உணவு அருந்திக்கொண்டிருந்தவர்கள் சாப்பிட்டுவிட்டு வெளியே சென்றதைத் தொடர்ந்து சுமார் 30 நிமிடங்களுக்குப் பின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னையும் அவரது நண்பர்களை ஊழியர்கள் அனுமதித்தனர்.

இந்தச் செய்தி ட்விட்டரில் வைரலானது. அதற்குப் பதிலளித்த ஜெசிந்தா ஆர்டெர்னின் வருங்கால கணவர் கிளார்க் கேஃபோர்ட், முன்பதிவு செய்யாமல் உணவகத்திற்குச் சென்றது தனது தவறுதான் என்றும் இருப்பினும் உணவக ஊழியர்கள் விரைவாக தங்களுக்கு இருக்கைகளை ஒதுக்கித் தந்தனர் என்றும் பதிவிட்டார். மேலும், உணவகத்தின் சேவை சிறப்பாக இருந்ததால் A+ ரேட்டிங் வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: ஹாங்காங் நாடாளுமன்றத்தில் மீண்டும் களேபரம்!

Last Updated :May 19, 2020, 2:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.