ETV Bharat / entertainment

தமிழ் அன்னையின் தவப்புதல்வன் நா.முத்துக்குமார் - பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு!

author img

By

Published : Jul 12, 2023, 12:13 PM IST

Updated : Jul 12, 2023, 12:24 PM IST

கவிஞரும் பாடலாசிரியருமான நா.முத்துகுமாரின் பிறந்தநாள் சிறப்பு தொகுப்பை காணலாம்

Etv Bharat
Etv Bharat

சென்னை: திரை இசைப் பாடல்கள் அன்றிலிருந்தே ரசிகர்களின் வாழ்வில் நீங்கா இடம் பிடித்தவை. அதில் பாடலாசிரியர்களின் பங்கும் அளப்பரியது. இசையமைப்பாளரை கொண்டாடும் சமூகம் பாடலாசிரியர்களை அவ்வளவாக கண்டு கொள்வதில்லை. அதையும் தாண்டி ஒரு சிலர் தான் அடையாளம் காணப்பட்டு கொண்டாடப்படுகிறார்கள்.

கண்ணதாசன், வாலி, வைரமுத்து என தொடர்ந்து தனது வரிகளின் மூலம் வாழ்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் எல்லோராலும் கொண்டாடப்பட்டவர், நா.முத்துக்குமார். காஞ்சிபுரத்தில் பிறந்த இந்த பாட்டுத் தலைவனின் வரிகளுக்கு மயங்காத, கலங்காத உள்ளங்கள் இல்லவே இல்லை. காதல், சோகம், ஏக்கம், கொண்டாட்டம், துரோகம், மழை, வெயில் என அத்தனை உணர்வுகளுக்கும் பாடல் எழுதியவர்.

அன்னையை போற்றிக் கொண்டு இருந்த சினிமாவில் தந்தையின் அருமையைப் பாடலில் சொன்னவர். மழையை கொண்டாடி தீர்த்தவர்கள் மத்தியில் 'வெயில்' அழகு என்றார். முத்துக்குமாரின் தந்தை ஒரு தமிழாசிரியர் என்பதால் வீடு முழுவதும் புத்தகங்களால் நிறைந்து கிடக்கும். ஒரு நூலகமே வைத்திருந்தார். சிறு வயதிலேயே அம்மாவும் இறந்துவிட, இயல்பிலேயே புத்தகங்கள் தான் அவரை அரவணைத்துக் கொண்டது.

இலக்கியம், கவிதை என படித்துக் கற்றறிந்தார். சென்னையில் தமிழ் இலக்கியமும் படித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் பாடகராக உருமாறினார். இவரது பாடல்களில் தனித்துவமும் இலக்கியத்தை சாமானியனுக்கும் புரிகின்ற மாதிரி பாடல் வரிகளில் கொடுத்திருப்பார். இவரால் சலாம்‌ குலாமும் எழுத முடியும்; அதே நேரத்தில் திருநெல்வேலி அல்வா டா என்றும் எழுத முடியும்.

அதே நேரத்தில் பறவையே எங்கு இருக்கிறாய், ஆனந்த யாழை மீட்டுகிறாய் என்று எழுத முடியும் என்றாலும் அப்போதும் நா.முத்துக்குமார் தான் நினைவுக்கு வருவார். மெட்டுக்குள் அழகாக வரிகளை கோர்ப்பதில் எப்போதுமே இவர் வித்தகர். 'வெயில்' படத்தில் வெயிலோடு விளையாடி என்ற பாடலில் சிறு வயதில் நாம் விளையாடிய அத்தனை விளையாட்டுகளையும் நம்மை உணர வைத்திருப்பார்.

செல்போன் இல்லாத அக்காலத்தில் பள்ளி விடுமுறை நாட்களில் வீட்டிற்கே போகாமல் விளையாடி திரிந்த அந்த நாட்கள் குறித்து இப்படி எழுதியிருப்பார். ''பசி வந்தா குருவி முட்டை, தண்ணிக்கு தேவன் குட்டை, பறிப்போமே சோளத்தட்டை, புழுதிதான் நம்ம சட்டை'' இதை விட நமது பால்யத்தின் சுவடுகளை யாரால் ஞாபகப்படுத்த முடியும்.

காதல் படத்தில் வரும் உனக்கென இருப்பேன் பாடலில் கல்லறை மீது தான் பூத்த பூக்கள் என்றுதான் வண்ணத்து பூச்சிகள் பார்த்திடுமா... மின்சார கம்பிகள் மீது மைனாக்கள் கூடுகட்டும்... நம் காதல் தடைகளை தாங்கும் என்று காதலின் வலிக்கு தனது வரிகளால் மருந்து தடவி இருப்பார், முத்துக்குமார். ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து ஆட்டம் போட வைக்கும் பாடல்களே அதிகம் அவர் எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனாலும் அதிலும் பல புதுமைகளை புகுத்தி அழகான வரிகளால் அந்தப் பாடல்களையும் ரசிக்கும்படி வைத்திருப்பார்.

சாமி படத்தில் வரும் திருநெல்வேலி அல்வா டா பாடலுக்காக திருநெல்வேலி முழுவதும் சுற்றி அந்த ஊரில் உள்ள முக்கியமான இடங்களை பாடல் வரிகளில் இணைத்திருப்பார். குறிப்பாக பாளையங்கோட்டையில் ஜெயிலு பக்கம் ரயிலு கூவும் என்ற வரி அற்புதமானது. ஏனென்றால் பாளையங்கோட்டை ஜெயில் அருகிலேயே தான் ரயில் தண்டவாளம் உள்ளது. அங்கே அடிக்கடி ரயில் போய்க் கொண்டே இருக்கும்.

'சுட்டும் விழிச்சுடரே' பாடலில் கருப்பு வெள்ளை பூக்கள் உண்டா... உன் கண்ணில் நான் கண்டேன் உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேன் என்று காதலியை வர்ணித்து எழுதியிருப்பார். எத்தனையோ பாடல்களை இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். 'கற்றது தமிழ்' படத்தில் முத்துக்குமார் நிகழ்த்தியது அற்புதம். 'பறவையே எங்கு இருக்கிறாய்' என்ற பாடலில் காதலியைத் தேடி அலையும் காதலனின் மன ஓட்டத்தை தனது வரிகளால் நமக்கும் கடத்தியிருப்பார்.

'முதல் முறை
வாழப் பிடிக்குதே முதல்
முறை வெளிச்சம் பிறக்குதே
முதல் முறை முறிந்த கிளை
ஒன்று பூக்குதே

முதல் முறை
கதவு திறக்குதே முதல்
முறை காற்று வருகுதே
முதல் முறை கனவு
பலிக்குதே அன்பே' என பிரிவின் வலியையும் வாழ்வின் இருத்தலையும் ஒருசேர அனுபவித்து எழுதியிருப்பார்.

இதுநாள் வரை அம்மாக்களையே கொண்டாடிய இந்த தமிழ் சினிமாவில் முதல் முறையாக அப்பாவுக்காக ''தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தையின் அன்பின் முன்னே'' என்ற பாடலை பரிசாக கொடுத்து விட்டுச்சென்றார், முத்துக்குமார். அம்மா இல்லாத தன்னை அம்மாவுமாக இருந்து வளர்த்தெடுத்த அப்பாவுக்கு இந்த பாடலைச் சமர்ப்பித்தார்.

தகப்பனின் கண்ணீரை கண்டோர் இல்லை; தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என வரும் வரிகள் எத்தனை ஆழமான உண்மையான வரிகள். அம்மாவின் இழப்பு குறித்து தனது நண்பரிடம் முத்துக்குமார் ஒருமுறை சொன்னது. இரவு நேரங்களில் அம்மா நினைவு வந்தால் மொட்டை மாடியில் சென்று படுத்துக்கொண்டு இளையராஜா பாடலை தான் கேட்டுக்கொண்டே இருப்பாராம். 'ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே' இந்த பாடலைத்தான் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பாராம்.

அதில் வரும் தனியானால் என்ன துணை இங்கே நான் பாடும் பாட்டுண்டு... அமுதே என்கண்ணே பசும்பொண்ணே இனி துன்பம் ஏன் இங்கு... இளையராஜா எனக்காகவே பாடியதாக இருக்கும் என்று கூறியுள்ளார். தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் இந்தப் பாடல் முத்துக்குமார் அவரது அப்பாவுக்கு எழுதிய மலரஞ்சலியாகத்தான் இருக்கும். அவருக்கு மட்டுமா எத்தனை எத்தனையோ மனிதர்களின் ஆன்மாவை ஆற்றுப்படுத்தும் பாடலல்லவா அது.

மண்ணை விட்டு மறைந்தவர்களுக்கு பிறந்தநாள் கொண்டாடலாமா என்று சிலர் கேட்கிறார்கள். முத்துக்குமார் போன்றவர்களுக்கு தமிழ் உள்ளவரையும் அவரது படைப்புகள் உள்ளவரையும் ஒரு போதும் மரணமில்லை. காஞ்சிபுரத்து கம்பன் நா.முத்துகுமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

இதையும் படிங்க: மிஷ்கினை கொலை செய்யத் தோன்றுகிறது - நடிகர் விஜய் ஆண்டனி 'லக லக'பேச்சு!

Last Updated :Jul 12, 2023, 12:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.