ETV Bharat / entertainment

இயக்குநர் பா.ரஞ்சித்தின் மார்கழியில் மக்களிசை! கே.ஜி.எப் தொடர்ந்து இன்று மாலை ஓசூரில்..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 24, 2023, 3:32 PM IST

Margazhiyil Makkalisai 2023: இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி நேற்று கே.ஜி.எப்-ல் கோலாகலமாக நடந்து முடிந்ததை அடுத்து, இன்று (டிச.24) மாலை ஓசூரில் நடைபெற உள்ளது.

director pa ranjith organized margazhiyil makkalisai 2023
இயக்குநர் பா.ரங்சித்தின் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி

சென்னை: திரைப்பட இயக்குநரான பா.ரஞ்சித் நீலம் பண்பாட்டு மையம் என்ற பெயரில் பல பண்பாட்டு நிகழ்வுகளை நடத்தி வருகிறார். அந்த வகையில், நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த மார்கழியில் மக்களிசை வருடா வருடம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மேலும், பல்வேறு இசைக்கலைஞர்கள், நடனக்கலைஞர்கள், பாடகர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சிக்கு, மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.

அந்த வகையில், இந்த வருடம் 2023ஆம் ஆண்டிற்கான மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி, நேற்று (டிச.23) கே.ஜி.எப்-ல் உள்ள நகராட்சி மைதானம், ராபர்ட்சன்பேட்டையில் முதல் நிகழ்ச்சியாகக் கோலாகலமாக நடைபெற்றது. ஒவ்வொரு வருடமும் சென்னை, மதுரை, கோவை என பல ஊர்களில் நடைபெற்று வந்த இந்த நிகழ்ச்சி, இந்த வருடம் கே.ஜி.எப் (டிச.23), ஓசூர் (டிச.24) மற்றும் சென்னையில் (டிச.28.29,30) நடைபெறுகிறது.

கே.ஜி.எப்-ல் நடந்த இந்த நிகழ்ச்சியில், இயக்குநர் பா. இரஞ்சித் சிறப்புரை ஆற்றினார். அதைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது, “கே.ஜி.எப் மக்களின் அன்பு என்னை வியக்க வைக்கிறது. தொடர்ந்து இந்த மக்களோடு பயணிக்க விரும்புகிறேன். கலை மக்களை ஒருங்கிணைக்கும். பாபா சாகேப் அம்பேத்கர் வழியில் நாம் பெரும் புரட்சியாக அணிதிரள்வோம்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் தினேஷ், கலையரசன், எழுத்தாளர் தமிழ் பிரபா, இயக்குநர் தினகர், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முனுசாமி பெரிய மேளம், சித்தன் ஜெய மூர்த்தி குழுவினரின் சித்தன் குணா, வேல்விழி மற்றும் ரவி ஆகிய குழுவினர் பங்கு பெற்று, நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

மேலும், இதில் ஏராளமான பொதுமக்கள் ஆரவாரத்துடன் பங்கேற்று, நிகழ்ச்சியை உற்சாகமாகக் கண்டுகளித்தனர். இந்த நிலையில், கே.ஜி.எப்-ஐ அடுத்து இன்று (டிச.24) மாலை ஓசூரில் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி நடக்க உள்ளது. நிகழ்ச்சியானது மாலை 4 மணிக்கு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது. மேலும், இந்த நிகழ்ச்சிக்குக் கட்டணம் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கேப்டன் மில்லர் படத்தின் உன் ஒளியிலே என்ற பாடல் வெளியீடு..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.